29 Oct 2017

வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே கிடைத்ததும் தேர்தல் ஆணைக்குழு சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்து விடும். தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத்

SHARE
வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே கிடைத்ததும் தேர்தல் ஆணைக்குழு சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்து விடும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன்  கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் ஏறாவூர் அல்முனீறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை 28.10.2017 இடம்பெற்றது.

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் தெளிவூட்டலைச் செய்த தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தொடர்ந்து கூறியதாவது@

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் கேட்டுக் கொள்ளப்பதற்கமைவாக இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அதியுயர் பீடமான நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்டுள்ள கலப்புத் தேர்தல் முறை பற்றியும், அதற்குத் தோதான சட்ட ஏற்பாடுகள் பற்றியும் விளக்கவே வந்துள்ளேன்.
நாடாளுமன்றத் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாகவே இந்த விளக்கங்கள உங்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இதிலுள்ள சில ஏற்பாடுகள் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருக்கலாம். ஆனாலும் அவை இந்த நாட்டின் ஒரு கோடி 86 இலட்சம் வாக்காளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினால் சட்டமாக்கப்பட்டவையாகும். எனவே இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
தேர்தல் ஆணைக்குழு சட்டத்தை இயற்றுவதில்லை. சட்டத் திருத்தம் செய்வதுமில்லை.  தேர்தல் ஆணைக்குழு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தும்.

அதேவேளை, எல்லை நிருணயம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள அச்சுப் பிழைகளையும் இன்ன பிற தவறுகளையும் திருத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மிக விரைவில் இரண்டு வர்;த்தமானி அறிவித்தல்கள் வர இருக்கின்றன. அவை வெளிவந்ததும் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சாரும்.

இலங்கையில் தொகுதிவாரித் தேர்தல் முறை, வட்டாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை, என்றெல்லாம் இருந்து அதன் பின்னர் 1978ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாறியது.

இது பட்டியல் முறையாகவும் பின்னர் விருப்பத் தேர்வு  முறையாகவும், இருந்தது.

அது மக்களுக்குச் சகிக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டதன் பின்னர், விருப்பத் தேர்வு முறை நீக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் நாடெங்கும் உருவானது.

அதன் விளைவாக 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளுர் அதிகார சபை சட்டம் என்ற ஒரு ஏற்பாட்டின் மூலம் வட்டார முறை மூலம் 70 வீதப் பிரதிநிதிகளும் தோல்வியடைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் மூலம் 30 வீதமும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு நடைமுறை இருந்து வந்தது.

இந்த நடைமுறையிலும் முன்னேற்றம் கண்டதாக 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி 14ஆம் இலக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.” என்றார்.
இந்த தெளிவுரை நிகழ்வில் எதிர்வரும் தேர்தல்களின் போது வேட்பு மனுக் கோரல், வேட்பாளர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் இளம் வேட்பாளர்கள் மற்றும் பெண் வேட்பாளர்களைச் கட்டாயம் உட்படுத்த வேண்டிய ஏற்பாடுகள், கட்டுப் பணம் செலுத்துதல், வேட்பு மனுவை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள், வாக்குச் சீட்டும் வாக்களித்தலும், வாக்கெடுப்பு முகவர்கள் நியமனம், மேயர், பிரதி மேயர், தவிசாளர் உதவித் தவிசாளர் நியமனம்,  பெண் உறுப்பினர்களைக் குறித்தொதுக்குதல்  பிரதிநிதிகள் தெரிவு ஆகியன பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: