நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடு தொடர்ந்து கொண்டிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி செவ்வாய்க்கிழமை 15.05.2018 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும், தொடர்ச்சியான விலையேற்றங்களும் அதனையே உறுதி செய்கின்றன. எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அமுல்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல், கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும்.
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்.
ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர் பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது.
ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது பதவிகளைப் பலப்படுத்தி தத்தமது கட்சிகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளனர்.
அமைச்சரவை மாற்றம் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து ஆடம்பர வீண் செலவுகளைக் குறைப்பதாகவே அமைய வேண்டும்.
பொது மக்களின் வரிப்பணத்தில் தமது விசுவாசிகளுக்கு ஆடம்பர சலுகைகளை அள்ளி வழங்கி சந்தோசப்படுத்தும் வகையிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் மோசமாக்கும் வகையில் பல விலையேற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது. சமையல் எரிவாயு, பால்மா எரிபொருள் உள்ளிட்ட மக்களின் அன்றாடத் தேவைகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விலையேற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது.
இது ஏழை மக்களின் அடிவயிற்றில் அடிப்பது போன்ற செயற்பாடாகும்.
ஊழல், வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவுகள், துஸ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடான பொருளாதார நிர்வாகங்கள் என்பன காரணமாகவே நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்துச் செல்கிறது.
விவசாய அமைச்சுக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட அதி சொகுசு கட்டடத் தொகுதி பாவனையின்றியே இது வரை காலமும் கிடக்கிறது. இது வரை காலமும் அதற்காக செலுத்தப்பட்ட வாடகை செலவீனம் 826 மில்லியன் என அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. இப்போது நியமிக்கப்பட்டுள்ள விவசாய அமைச்சர் தான் பழைய கட்டிடத்திற்கே செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.
ஒரு அமைச்சின் கீழ் நடந்த துஸ்பிரயோகத்திற்கான ஒரு உதாரணமே இதுவாகும். இந்த அநியாயமான துஸ்பிரயோகங்களை நிறுத்துவதற்கோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தில் இருக்கும் எவராலும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.
முழு நாட்டையுமே அதிரவைத்த ஊழல் பெருச்சாளிகளை கைது செய்து கொள்ளளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மீட்காமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டு மக்களை தொடர்ந்தும் பொருளாதார சுமைக்குள் தள்ளும் இந்தப் போக்கினை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
மக்களின் நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான உழைப்பை எமது கட்சி தொடர்ந்தும் இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் மேற்கொள்ளும்.
0 Comments:
Post a Comment