மாகாண சபை கலைக்கப்பட்டாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ளும் எமது பயணத்திலிருந்து ஒருபோதும் ஒதுங்க மாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மகால அரசியல் நடப்புக்களில் மாகாண சபை கலைப்புப் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுவது குறித்துக் கேட்டபோது அவர் திங்கட்கிழமை 18.09.2017 இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மாகாண சபை கலைக்கப்படப்போகிறது என பீரங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாகாண சபை ஆட்சி எப்போதாயினும் கலைக்கப்படவேண்டியதுதான் என்பதை இவர்கள் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.
அரசியலமைப்பின்படி எப்போதாயினும் மாகாண சபையும், நாடாளுமன்றமும், உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்படத்தான் வேண்டும். இது ஒரு புதினமான நூதனக் கண்டு பிடிப்போ அல்லது முரசு கொட்டி அறிவிக்க வேண்டிய விடயமோ அல்ல.
இதுபற்றி சிலர் பாமர மக்களிடத்தில் போய் நின்று ஆர்ப்பரிப்பது வெட்கக் கேடாக இருக்கின்றது.
சின்னத்தனமான அரசியல்வாதிகள் சிலர் எதை, எங்கு, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்கள்.
உணர்ச்சி வசப்படும்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மக்களை உசுப்பேற்றி விடுகிறார்கள்.
அதன் விளைவுகளைக் கொண்டு எதிர்கால தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது அவர்களது நப்பாசை.
குறைமதி கிறுக்கர்களான இத்தகைய அரசியல்வாதிகள், சிறுபான்மையினருக்கான அரசியல் விடிவு என்ன, அதனை அடைந்து கொள்வதற்கான வியூகங்களை எப்படி வகுக்க வேண்டும், சமூக மக்களை ஒற்றுமைப்படுத்தி எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவுகளே இல்லாமல் கொக்கரிப்பதால் நாமும் சிறுபான்மையினம் என்ற வகையில் வெட்கப்பட வேண்டியுள்ளது. நல்லதோ கெட்டதோ மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். அதுதான் ஒரு சிறந்த மனிதப் பண்பு. அற்ப அரசியலுக்காக அழுக்கை உண்டு வாழக் கூடாது.
20வது அரசியல் திருத்தம் என்றாலே என்னவென்று தெரியாமல் மக்களிடம் போய் பேசித் திரியும் குறையறிவு அரசியல்வாதிகளைப் பற்றி வெட்கக் கேடாக உள்ளது.
இது பற்றி நாம் கணக்கெடுப்பதில்லை என்றாலும் மக்களுக்கு சிறந்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்த வேண்டியுள்ளது.
யாரோ இருட்டில் வெட்டிப் போட்ட படுகுழியில் இவர்கள் பகலில் வெட்ட வெளிச்சத்தில் போய் விழுகின்றார்கள்.
மாகாண ஆட்சி நீடித்தாலும், கலைக்கப்பட்டாலும் நாம், பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சார்பாக அவர்களது அரசியல் அதிகார உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம்.
முக்கியமாக சிறுபான்மைச் சமூகங்களின் ஒன்றுபட்ட அரசியல் விடுதலைக்காக நாம் குரலெழுப்புவதை இந்த சோரம்போகும் குறைமதி அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்திவிட முடியாது”என்றார்.
0 Comments:
Post a Comment