அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று சில உதிரிக்கட்சிகளுடன் இணைந்து கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் நிலைவரும்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவடைப் பகுதியின் நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழா சனிக்கிழமை (05) மாலை முன்பள்ளி பொறுப்பாசிரியர் ம.கலாவதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் வேதனம் அடுத்த வருடம் அதிகரிக்கப்படவுள்ளது. இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக்காலம் இன்னும் குறுகிய காலத்தில் நிறைவடைய இருக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் மாதம் முதலாம் திகதியுடன் கிழக்கு மாகாணதின் 5 வருட ஆட்சிக்காலம் முடிவுறும் நிலையிலிக்கின்றது. இந்த ஆட்சிக்காலம் சிலவேளைகளில் மேலும் நீடிக்கப்படவுள்ளதாகவும் கருத்துக்கள் வருகின்றன. மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இலங்கையிலே உள்ள 9 மாகாணசபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடாத்தக்கூடிய சூழலை மத்திய அராங்கம் உருவாக்கி வருவதாக நாம் அறிகின்றோம். கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட 3 மாகாணசபைகளின் ஆயுட் காலம் எதிர்வரும் 9 ஆம் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுற இரு;ககின்றது. வடமாகண சபை உள்ளிட்ட 3 மாகாணசபையின் ஆயுட் காலம் 2018 ஆம் ஆண்டும், மேல்மாகாணம், கொழும்பு உள்ளிட்ட 3 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் 2019 ஆம் ஆண்டும், நிறைவுற இருக்கின்றது. ஆனால் இலங்கையிலுள்ள 9 மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நேரத்தில் நடாத்த வேண்டுமாக இருந்தால் 2019 ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அந்தக் காலக்கெடு வரும். இதற்குட்பட்ட 2 வருடத்தில் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். கடந்த 2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுன்பு மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் எதிர்க் கட்சியிலிருந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த நாம் கிழக்கிலுள்ள 2 அமைச்சிகளுக்கூடாக ஓரளவு அபிவிருத்திகளைச் செய்து கொண்டு வருகின்றோம்.
கிழக்கில் 40 வீதத்திற்குக் சற்றுக் குறைவாக தமிழ் மக்கள் கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் தேர்தல் ஒன்று ஏற்படுமாக இருந்தால் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஆனாலும் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று சில உதிரிக்கட்சிகளுடன் இணைந்து கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் நிலைவரும்.
எல்லைப் புறக்கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் எமது கரங்களில் இருக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்டும் அரசியலமைப்பில் சமஸ்ட்டி ரீதியிலான அதிகாரங்கள் பகிரப்பட்டாலே நாங்கள் நிம்மதியாக வாழ முடியும். கடந்த காலங்களில் அகிம்சை ஆயுத ரீதியாக நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம், பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றோம். நாம் தமிழீழத்தை பெறாவிட்டாலும், எமது உரிமைகள் கிடைக்க வேண்டும் நாம் நிம்மதியாக இருக்க வேண்டும், இறந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment