வாழைச்சேனை - இலங்கைப் போக்குவரத்துச் சாலையில் கடமை புரியும் பஸ் நடத்துனரான எச். முஹம்மது அன்வர் (வயது 35) என்பவர் கடமையின்போது பஸ்ஸிலிருந்து தவறிக் கீழே வீதியில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை மரணித்து விட்டதாக சாலை முகாமையாளர் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி சாலை முகாமையாளர் மேலும் கூறும்போது@ சம்பவ தினமான வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மட்டக்களப்பிலிருந்து பருத்தித்துறைக்கு அதன் வழமையான சேவையில் கடந்த 09.05.2017 அன்றும் ஈடுபடுத்தப்பட்டது.
அன்றைய தினம் மேற்படி பஸ் கதுறுவெல பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சென்று கொண்டிருக்கும்போது பஸ் நடத்துரான அன்வர் திடீரென பஸ்ஸிலிருந்து தவறி கீழே வீதியில் விழுந்துள்ளார்.
தலையிலும் உடம்பிலுமாக படுகாயமடைந்த அவர் உடனடியாக பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை காலை (18.05.2017) மரணித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி கதுறுவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரணித்தவரான ஓட்டமாவடியைச் சேர்ந்த மேற்படி பஸ் நடத்துனர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment