மட்டக்களப்பு-கல்குடா எதனோல் மதுசார உற்பத்திச் சாலையின் நிருமாணப் பணிகளை நிறுத்தக் கோரி வெள்ளிக்கிழமை (19.05.2017) பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
“கலாசார, குடும்ப சீரழிவுகளை உருவாக்கி சமுதாயத்தைக் கெடுக்கும் மதுசார உற்பத்தித் தொழிற்சாலை நிருமாணப் பணிகளை உடன் நிறுத்தக் கோருவோம், மதுவை எதிர்;த்து சமுதாய நலன் காப்போம்” எனும் வாசகங்கள் சுவரொட்டிகளில் அச்சிடப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை இந்த எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓட்டமாவடி நகரில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்குடா ஜம்மிய்யத்துல் உலமா சபையும் வெள்ளிக்கிழமை ஜம்மாத் தொழுகைக்குப் பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பு-மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையில் பாசிக்குடா, மட்டக்களப்பு வாழைச்சேனை, கொழும்பு வீதிச் சந்தியில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைந்து இந்த மதுசார உற்பத்தி நிலையத்திற்கெதிராகக் குரல் கொடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கல்குடா பிரதேசத்திலுள்ள 16 ஜும்மாப் பள்ளிவாசல்கள் பங்குபற்றும் இந்த ஆர்ப்பாட்;டத்தில் பல் சமயத் தலைவர்கள் மற்றும் அனைத்து சமூக பிரதேச அரசியல்வாதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக கல்குடா ஜம்மிய்யத்துல் உலமா சபைச் செயலாளர் ஏ.எம். இஸ்ஸத் அஹமத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் போதைப் பாவனையைத் தடுப்பது தொடர்பில் பல் சமயத் தலைவர்களினால் சொற்பொழிவு இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment