14 Dec 2016

கதிரவெளியில் கடற்கரையோரக் காணிகளைப் பாதுகாக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன்னால் கதிரவெளிப் பொது மக்கள் அணிதிரண்டு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கதிரவெளிக் கடற்கரையோரத்தை அண்டிய பிரதேசங்களில் உள்ள அரச காணிகளை அரசியல்வாதிகளின்
பின்புலத்துடன் பணமுதலைகளுக்கு விற்பதை அனுமதிக்க வேண்டாம், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக கதிரவெளி மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் முத்துசாமி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கதிரவெளி கடற்கரையோரம் மற்றும் புச்சாக்கேணி கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள அரச காணிகள் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உறுதி முடிக்கப்பட்டு வர்த்தகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அரச அதிகாரிகள் இந்தக் காணிக் கையாடலுக்குத் துணை போகக் கூடாது என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.
என்ன காரணம் கொண்டும் இந்தக் காணிகளை மீட்டெடுக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் சூளுரைத்தனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பான மகஜரொன்றையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வாகரைப் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: