4 Jul 2016

நோன்பினால் கிடைக்கப்பெற்ற ஆன்மீக லௌகீக பயிற்சிகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பெருநாள் வாழ்த்து.

SHARE
புனித ரமழான் மாதத்தில்; பெற்றுக்கொண்ட ஆன்மீக, லௌகீக பயிற்சிகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நாம் கடைப்பிடிப்பதன் மூலமே அதன் வெற்றி தங்கியுள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்
நஸீர் அஹமட் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நோன்புப் பெருநாளில் நாம் பெற்றிருக்கும் மகிழ்ச்சி அனைத்து சமுதாயத்துக்கும்  கிடைக்க நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

நாம் தற்போது இக்கட்டான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றோம். முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வினால் இனவாதிகள் எம்மை தொடர்ந்தும் ஏளனம் செய்தும் நச்சரித்தும் தூஷித்தும் வருகின்றனர்.

பிரதேச, அரசியல் வேறுபாடுகளையும், பேதங்களையும் மறந்து ஒன்றுபடுவதன் மூலமே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களை நாம் முறியடிக்க முடியும்.

அரசியல் ரீதியில் அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. சர்வதேசம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தை இன்னுமே ஒரு பொருட்டாக கருதாத நிலையில் நாம் நம்பி வாக்களித்த உள்ளுர் ஆட்சியாளர்களும் நமக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்க வேண்டும். அந்த வகையில் நமது சமூகத் தலைமைகள் இந்த முயற்சிகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை. முஸ்லிம்களின் அதிக ஆதரவைப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த விடயங்களில் அதிக கடப்பாடு உண்டென்பது நமக்குத் தெரியும். முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கை பெற்றுக் கொடுப்பதில் நான் முன்னின்று செயற்படுவேன்;.

மீள் குடியேற்றம், தொழில்வாய்ப்பு வாழ்வாதாரப் பிரச்சினைகளால் அல்லலுறும் எமது மக்களை அவரசமாகக் கரையேற்றி நிம்மதியாக வாழச் செய்வதே வாக்களித்த மக்களுக்கு நாம் செய்யும் தார்மீக கடமையாகும் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: