7 Jul 2015

மக்களால் நிராகரிக்கப்பட்டு கட்சிகளால் துரத்தப்பட்ட சிலர் பணத்துக்காக புதிய வடிவில் களமிறங்கவுள்ளனர்.

SHARE

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி கூடுதலான உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும் என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இங்கு யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைக்க வேண்டும் என்பதற்காக சிங்கள கட்சிகளில் பல தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிகின்றேன். 

கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு கட்சிகளால் துரத்தப்பட்ட சிலர் பணத்துக்காக புதிய வடிவில் களமிறங்கவுள்ளனர். 

அவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கான சந்தர்ப்பமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். 

எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை 73 சதவீதமான தமிழர்களின் வாக்குகள் உள்ளன. எமது மக்கள் வாக்களிப்பதிலுள்ள ஆர்வக் குறைவின் காரணமாக எமது பிரதிநிதித்துவம் வேறோரு சமூகத்திற்கு செல்கிறது. 

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் சிங்கள கட்சிகளில் பல தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். 

கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழர்களின் வாக்குகளினால் வேறோரு இனத்தவரே வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது நாம் அறிந்த உண்மை. 

காலகாலமாக நாம் விட்ட தவறினை இந்த தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும். 

தேசிய அரசியலில் சிங்கள கட்சிகளிடையே நடைபெறும் மாற்றங்கள் காரணமாக இம்முறை தனிப் பெரும்பான்மையோடு ஒரு அரசாங்கம் அமைவது சந்தேகமாகியுள்ளது. 

இந்த நிலையில் அமையப்போகும் புதிய தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் தேவைப்படும். 

தமிழ் மக்கள் அதிகபடியாக வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குவதற்காக பேரம் பேசுவதனுடாக எமது இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும். 

எமது பிரதேசங்களை தொடர்ந்தும் அபிவிருத்திகளில் புறக்கணிப்பதற்கு இடமளிக்க முடியாது. 

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு சென்ற வேறு இனத்தவர்கள் எமது பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள். 

அதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த எம்மவர்களும் துணைபோயுள்ளார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் விதவைகள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்பு 130க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளார்கள். பல பிள்ளைகள் தமது தந்தையரைத் தேடித் திரிகிறார்கள். 

எனது அலுவலகத்திலே பிள்ளைகளோடு தாய்மார் தினமும் வருகின்றார்கள். இது எமது பிரதேச மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினைகளாக காணப்படுகிறது. செங்கலடிப் பிரதேசத்தில் தான் அதிகமானவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். 

இன்று அவர்களால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான பிள்ளைகள் தந்தையரை இழந்தவர்களாகி விருக்கின்றார்கள். 

எமது உறவுகளைக் கடத்தியவர்கள் கடந்த அரசாங்கத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவித்து சொகுசு வாகனங்களில் திரிகிறார்கள். பல சௌகரியங்களை கடந்த காலங்களில் அனுபவித்தார்கள். 

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். ஆனால் எனது கணவனை இழந்த நிலையில் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அழுத குரலிலே கடத்தப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னிடம் கூறினார்கள். 

இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடத்தப்பட்டவர்கள் சார்பில் ஆராய்ந்து வருகிறது. 

யார் கடத்தினார்கள் யார் இந்த அநியாயங்களைச் செய்தார்கள் என மக்கள் சாட்சியமளிக்கத் தயாராக விருக்கிறார்கள். மக்கள் ஊடாக அவர்களை நீதியின் முன் நிறுத்த விருக்கிறோம். 

எமது மக்களுக்க நடந்த அநீதிகளைத் தட்டிக் கேட்பவர்களாக நாங்கள் இருக்கின்ற காரணத்தினால் இன்னும் நாங்கள் பொறுமையாகவிருக்க முடியாது” என்றார். 
SHARE

Author: verified_user

0 Comments: