25 May 2025

வெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன நடந்தது தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றோம் - குடும்பஸ்த்தாரின் அழுகை.

SHARE

வெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன நடந்தது தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றோம் - குடும்பஸ்த்தாரின் அழுகை.

எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி  வெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றார் சட்டரீதியாகவே தொழில் வாய்ப்புக்காகத்தான் அவர் பயணமானார் அவர் திருவோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாகவே அவர் சென்றிருந்தார். எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி வெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். அவர் வெளிநாடு செல்லவேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிவர்த்தி செய்து அம்மாவின் ஆம்மா ஈடேறவேண்டும் என்பதற்காகவும்,  எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். 

என மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார். அவரது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதன் வெலாரஸ் நாட்டிற்குச் சென்று பின்னர் அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ளதாகவும் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை(25.05.2025) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

வெலாரஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கு என்ன சுமைகள் இருந்தன என்பது தொடர்பில் எனக்கோ மற்றைய என் தம்பி, தங்கை மற்றும் அப்பாவுக்கும் எதுவித தகவல்களையும் அவர் கூறவில்லை வழக்கமாக என்னுடன் சிரித்து கதைத்து பேசுவது போல் பேசிக்கொண்டே இருந்தார். அவர் அங்கு மிகவும் சிரமப்படுவதாக எனக்கு அவர் தெரிவித்திருக்க வில்லை. இந்நிலையில் அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்து தாமாகவே உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. 

இச்செய்தி கேள்விப்பட்ட உடனேயே நாம் செய்வதறியாது திகைத்துப் போனோம். இது உண்மையானதா பொய்யானதா என நாம் தவியாய் இன்றுவரையும் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது. எது நடந்தாலும் அதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்திலே கடமைப்படுகின்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்திடம் வழங்கியிருந்தேன். இவ்வாறு எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய பிரேதத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு நான் அந்த உத்தியோதரிடம் தெரிவித்திருந்தேன்.

பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இதற்கு மேலாக எனது தம்பிக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும்  தெரிவித்து இருந்தேன். இது தொடர்பாக ஒரு சிலர் எனது வீட்டிற்கு வந்து நிலைமையை விசாரித்துவிட்டு சென்றார்கள். தகவல்கள் பெற்று சென்றார்கள் ஆனால் இன்றுவரையில் எனது தம்பியின் உடல் எமக்கு எங்கிருக்கிறது, அவர் உண்மையிலேயே உயிரிழந்து விட்டாரா? அல்லது குத்துயிராக வைத்தியசாலையில் இருக்கிறாரா? அவர் எவ்வாறு உயிரிழந்தார்? அல்லது அவர் உயிருடன் இருக்கிறாரா? இந்த எதுவித தகவல்களும்  எமக்கு தெரியாதுள்ளது. நானும் எனது தம்பி எனது தங்கை எனது அப்பா மற்றும் எனது உறவினர் அனைவரும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அவர் உயிரிழந்திருந்தால் எனது தம்பியின் பிரேதம் எங்கு இருக்கின்றது அதற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக நாம் யாரிடம் போய் கேட்பது என்பது கூட எனக்கு தெரியாது உள்ளது. 

கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக அறிந்தோம் இன்று மே 25ஆம் திகதி ஆகிறது இரு மாதங்கள் ஆகின்றன இதுவரைக்கும் எனது தம்பியின் தகவல்கள் எதுவும் தெரியாது நாம் அவஸ்தை படுகின்றோம். தம்பி வெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய  முகவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாக எனக்கு குறுஞ் செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கின்றார் இல்லை. 

இவ்வாறான துப்பாக்கி நிலைக்கு மத்தியிலும் மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை அறிவிக்கின்றோம். எமது கருத்துக்களை செவிமடுக்கின்ற நபர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர், மேலும் இந்த நாட்டின் ஜனாதிபதி, ஆகியோர் நான் இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் எனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்து தருமாறும் அவர் உயிரிழந்திருந்தால் அவருடைய பிரேதத்தையாவது எனக்கு ஒப்படைப்பதற்கு அல்லது கொண்டு வருவதற்கு உதவி செய்து தருமாறு நான் பணிவுடன் வேண்டுகின்றேன். 

மேலும் வெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின்  தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா? உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய பிரேதம் எங்கிருக்கின்றது என்பது யாராவது எமக்கு தெரிவித்து அதனை பெற்று தருவதற்கு மரணித்தால் சகோதரனுடைய உடலை எனக்கு வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கும் உதவி செய்யுமாறு நாம் வினையமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: