17 Feb 2024

தமிழக இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக தெரிவிப்பு.

SHARE

தமிழக இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க  போவதாக தெரிவிப்பு.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் சனிக்கிழமை(17.02.2024) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி  உள்ளனர்.

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் திகதி மீன்பிடிக்க சென்று நான்காம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்களின் வழக்கு வெள்ளிக்கிழமை(16.02.2024) யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், இரண்டு மீன்பிடி விசைப்படைகு ஓட்டுநர்களை ஆறு மாத காலம் சிறந்த தண்டனையும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2019 ஆண்ட சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் மெல்வின்  மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து  தீர்பளித்தார்.

இலங்கை  நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக இரத்து  செய்ய வேண்டும் எனவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை(17.02.2024) ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று மீனவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்களது சிறையில் உள்ள தங்களது உறவினர்களை  உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் 23, 24 ஆகிய திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் புறக்கணித்தல், விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுதல், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி விசைப்படகுகளில் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தல், ராமேஸ்வரத்தில் இருந்து எதிர்வரும்  செவ்வாய்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்கு மூன்று நாட்கள் நடந்து சென்று விசைப்படகு மீனவர்கள் அனைவரும் தங்களது படகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்தல், உள்ளிட்ட தீர்மானங்களை மீனவர்கள் கூட்டத்தின்போது ஆலோசனை முன்வைத்துள்ளனர்

மேலும் தங்களது கண்டனத்தை தெரிவித்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச்சிட்டு வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: