19 Feb 2024

நீண்டகால பயன் தரும் மரங்களை வளர்த்து இயற்கையைப் பாதுகாக்கும் திட்டத்தில் கிராமிய மக்கள் பங்கேற்பு

SHARE

நீண்டகால பயன் தரும் மரங்களை வளர்த்து இயற்கையைப் பாதுகாக்கும் திட்டத்தில் கிராமிய மக்கள் பங்கேற்பு.

கால நிலைமாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் வாழ்வாதார இழப்புக்கள் பொருளாதார நெருக்கடிகள் என்பனவற்றுக்குத் தாக்குப் பிடித்து அடிமட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டம் பிரதேச செயலகம் மற்றும் கூட்டுறவுத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு அமுல்படுத்தப்பட்டு வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

பிரதேசத்தில்  நீண்டகாலப் பயன்தரும் 20 ஆயிரம் மரங்களை நாட்டும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சாளம்பைக் குளத்தைச் சூழவுள்ள பகுதிகளில் நீண்ட காலப் பயன்தரும் வனவள மரங்களான தேக்கு சமுளை போன்ற 500 மரக் கன்றுகள் கிராம மக்களால் நாட்டி வைக்கப்பட்டன.

இடம்பெற்ற இந்நிகழ்வில் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.பானுப்பிரியா, கிராம அலுவலர் எஸ்.விஜயராஜன் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களான எஸ்.நவிர்ணநாதன், .சஞ்ஜித் பயனாளிகளான கிராம மட்ட கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களான விவசாயப் பெண்களும் கலந்து கொண்டனர்.

காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இத்திட்டம் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமுலாகிறது. சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உணவுப் பஞ்சத்தையும் நஞ்சுள்ள உணவுகளையும் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் உள்ளுர் விவசாயிகளை ஊக்கப்படுத்தும்  நோக்கில் விவசாயிகளுக்கு தலா 1500 ரூபாய் பெறுமதியான கத்தரி, கறிமிளகாய், கீரை, தக்காளி, பீர்க்கு, சிறகவரை, பாகல், பயற்றை, வெண்டி உள்ளிட்ட பாரம்பரிய உள்ளுர் பயிர் விதைகளும் ஏற்கெனவே  பிரதேச மக்களுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் கிராமிய விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்காக 4000 விதைத்  தேங்காய்கள் நாற்றிடப்பட்டு வாகரைப் பிரதேசத்துக்கான பாரம்பரிய விதை வங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு விதைத் தேங்காய்கள், தென்னங்கன்றுகள், பயிர் விதைகள் ஆகியவையும் ஏற்கெனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிலைபேறான அபிவிருத்தியை அடையச் செய்ய   வேண்டும் என்ற நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் கிராமங்களில் பல பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களும் வருமானமும் ஈட்டக் கூடியதாகவுள்ளது.

இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் தென்னை உட்பட நீண்டகால பயன் தரும் பழ மரங்கள், உப உணவுப் பயிர்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் நஞ்சுள்ள உணவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















 

SHARE

Author: verified_user

0 Comments: