அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தின் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இதேபோன்று தான் உனக்கும் செய்வோம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தம்பிலுவில் மத்திய சந்தை கட்டடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தின் பெயர் பதாதையை இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு அடித்து உடைத்துள்ளதுடன், அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதே போன்றுதான் உனக்கும் செய்வோம் - என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி செல்வராணி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இன்று தொலைத்துவிட்டு தேடுவது எங்களது உறவுகளை, நாங்கள் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. யாருடனும் எதுவித பிரச்சனைக்கும் செல்லவில்லை
நாங்கள் எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரிய வேண்டும் என தான் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தை வைத்து போராடி வருகின்றோம்.
இதனை செய்தவர்கள் யார் என எங்களுக்கு தெரியாது. எனினும் அவர்களை விரைவில் கண்டுபிடிப்போம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இம்மாதம் 30ம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டமொன்றை நடத்த இருக்கும் நிலையில் இந்த செயற்பாட்டை ஏன் செய்தார்கள் என தெரியவில்லை.
இதனை யார் செய்தாலும் எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை போராட்டத்தை தொடருவோமென அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment