கழிவு முகாமைத்துவத்தில் குடியிருப்பாளர்களிடையே அதிக விழிப்புணர்வு தேவையாகவுள்ளதென மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கோட்டைமுனை லேடி மெனிங் ரைவ் பிரதான வடிகான் துப்புரவுப் பணிகள் புதன்கிழமை 24.10.2018 இடம்பெற்றன.
மாநகரசபை சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார மேற்பார்வையாளர்களின் வழிகாட்டலில் இந்த வடிகான் துப்பரவு செய்யும் பணியில் மாநகர சுகாதாரத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து மேலும் கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் சரவணபவன்,
மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கோடு வரியிறுப்பாளர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்,
ஆயினும், கழிவு முகாமைத்துவம் முறையாகக் கடைப்பிடிக்காமல் விடப்படுவதினால் ஆளணி உள்ளிட்ட பல்வேறு வலுக்கள் வீண் விரயம் செய்யப்படுன்றன.
மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வெள்ள நீரை இலகுவாக வடிந்தோடும் வகையில் வெள்ள நீர் செல்லும் பிரதான வடிகானினுள் குடியிருப்பாளர்கள் கழிவு நீரை விடுவதனால் கழிவு முகாமைத்துவம் மிகவும் சிரமமான நிலையில் உள்ளது.
கான்களுக்குள் செல்லும் கழிவு நீர்க் குழாய்களை இனங்கண்டு அடைத்து வருகின்றோம். அவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு மாநகர கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக எந்தவித பாகுபாடும் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment