சூழல் நேயத்துடன் விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடைய கைகோர்ப்போம் எனும் தொணிப்பொருளில் மாபெரும் விழிப்பூட்டல் எழுச்சிப் போரணி ஒன்று வியாழக்கிழமை (28) மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு விரிவாக்கப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழிப்பூட்டல் பேரணி களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டு, பிரதான வீதிவழியாக சென்று களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் வீதி வரைச் சென்றடைந்தது.
இதில் விவசாயத்திணைக்களத்தினர், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினர், பாடசாலை மாணவர்கள், சுகாதாரத்துறையினர், விவசாயிகள் பொதுமக்கள், பொலிசார், மற்றும் அரச, அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இரசாயன பாவனையைக் குறைத்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன், சூழல் நேயத்துடன் விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடைய கைகோர்ப்போம் எனும் விளம்பரப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இயற்கை உரவகைகளின் பாவனைகளை அதிகரித்து, இரசாயன உரவகைகளை, மற்றும் கிருமி நாசனிகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக கலந்து கொண்டிருந்த அதிகாரிகளின் கருத்துக்களும் இடம்பெற்றதுடன், இரசாயனப் பாவனைகளைத் தடுத்தல் தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களால் வீதி நாடகம் ஒன்றும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment