கிழக்குமாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாம உடனான சந்திப்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல் படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதால் தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளை ஒன்றியம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
இது விடயமாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ஏ.எல்.என். லியனகே, தகவல் தொடர்பு அதிகாரிகளான வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் மற்றும் வைத்தியர் எம். ரூபராஜன் ஆகியோர் புதன்கிழமை 25.04.2018 அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாண ஆளுநருடன் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் இம்மாதம் 10ஆம் திகதி மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கமைவாக அரசாங்க வைத்தியர்களுக்கு 2018 ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகளின் இதுவரை வழங்கப்படாதுள்ள எஞ்சியுள்ள கொடுப்பனவகளை தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் வழங்க வேண்டும்,
மே மாதத்திற்குரிய சம்பளப் பட்டியலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கும், மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணிப்புரையின்படி கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகளுக்கு இதுவரை எதுவித கொடுப்பனவுகளும் கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் மே மாதத்திற்கான கொடுப்பனவு புதிய சுற்றறிக்கையின்படி வழங்கப்படுவது உறுதியற்றதாகவே தென்படுகிறது.
கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்கக் கிளைகள் ஒன்றிணைந்து இது விடயமாக கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் மாகாண அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.
அதற்கும் மேலதிகமாக மாகாண பிரதம செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் மூலம் இக்கொடுப்பனவு சம்பந்தப்பட்ட விடயம் பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் தான்தோன்றித் தனமாக தட்டிக் கழிக்கப்படுவது புலனாகின்றது.
ஆரம்பம் முதலே இது சம்பந்தமாக கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்திருந்தும் அது இன்னமும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதற்கு அவருடைய பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடு, வினைத்திறனற்ற தன்மை காரணங்களாக அமைகின்றதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அரச மருத்துவ அதிகாரிகளின் வேண்டுகோள்களையும், ஆளுநரின் பணிப்புரைகளையும் உதாசீனம் செய்வது தெளிவாகின்றது.
கிழக்கு மாகாணத்தில் க~;டப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான வைத்திய அதிகாரிகள் வெளி மாகாணங்களை நிரந்தர வதிவிடமாக கொண்டிருப்பதுடன் பகுதி நேர தனியார் மருத்துவ சேவைகளிலும் ஈடுபடுவதில்லை. எனவே இக்கொடுப்பனவு விடயத்தில் கிழக்கு மாகாண அதிகாரிகள் இதை விட முன்னுரிமை அளித்து செயற்பட்டிருத்தல் வேண்டும்.
மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் தகுதி வாய்ந்த வைத்திய நிருவாகிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக இவ்வைத்தியசாலைகளின் செயற்பாடு, வைத்திய அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் நோயாளர்களுக்கான சேவைகள் என்பவற்றில் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதிப் பணிப்பாளர் வெற்றிடம் நிலவுகின்றது. ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில்; தகுதியுடைய வைத்திய நிருவாகியில்லாததால் நோயாளிகளும், வைத்தியர்களும் ஏனைய சேவையாளர்களும் பல நிருவாக சீர்கேடுகளை அனுபவிக்கின்றனர். ஆனால் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு பிரதிப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு இரு பிரதிப் பணிப்பாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இப்பிரச்சினையை தீர்க்குமுகமாக கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் கௌரவ ஆளுனருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்ட்டுள்ளது. ஆனால் சுகாதார அமைச்சுக்குள் நிலவும் அதிகாரப் போட்டிகள் காரணமாக அவை இன்றுவரை செயற்படுத்தப்படவில்லை.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு, 2018-04-26 ஆம் திகதிக்கு முன்னர் வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் எஞ்சிய கொடுப்பனவுகள் முற்றாக வழங்கப்படுதல் வேண்டும். மேலும் வைத்திய நிருவாகிகளின் சரியான நியமனங்கள் 2018-04-26 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளைகளின் கூட்டமைப்பானது தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இத் தொழிற்சங்க போராட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகளும் அவர்களது முழுப் பங்களிப்புக்களையும் வழங்க தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் சுகாதார சேiவியில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பிரதம செயலாளருமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment