படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் புதன்கிழமை (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது….
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்துள்ள இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியாளர் ஒன்றியமும் இணைந்து கொள்கின்றது.
ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை தென் பகுதியில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டுசென்ற ஊடக ஜாம்பவனாக திகழ்ந்த நிலையில் பேரினவாதிகளினால் நயவஞ்சகமாக சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் படுகொலைசெய்யப்பட்டார்.
மாமனிதர் டி.சிவராம் படுகொலையின் சூத்திரதாரிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அவரது நினைவு தினத்தன்றும் அந்தகோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்து போராட்டம் ஒன்றையும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தவுள்ளது.
குறிப்பாக படுகொலைசெய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பில் தொடர்ச்சியான நீதிவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் 35க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு ஊடகவியலாளரின் கொலை தொடர்பிலும் இதுவரையில் நீதியைப்பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்த நல்லாட்சியாவது படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைபெற்றுக்கொடுக்கும் என்று கருதியபோதிலும் கடந்த காலப்போக்கையே இன்றும் காணமுடிகின்றது.
இந்த நிலையில் மாமனிதர் சிவராம் மற்றும் ஐ.நடேசன் உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக தனி ஆணையம் அமைத்து அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கும் வகையில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
இந்த நினைவு நாளில் அனைத்து ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்குமாறு அழைக்கின்றோம்.
அன்றையதினம் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கும் வகையிலான நடவடிக்கையும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment