காத்தான்குடி நகர சபைப் பிரிவில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தும் திட்டம் உடனடியாக அமுலுக்கு வருவதாக நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை 19.04.2018 விடுத்துள்ள பொது அறிவித்தலில் வெள்ளிக்கிழமை 20.04.2018 முதல் காத்தான்குடி நகர சபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும் உரிமையாளரின் அல்லது வளர்ப்பாளரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள் அனைதையும் நகர சபை ஊழியர்கள் கைப்பற்றுவார்கள்.
ஏற்கெனவே நகர சபையில் எடுக்கப்பட்ட ஒத்திசைவான தீர்மானத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் நிடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதேசப் பொதுமக்கள், பாடசாலை நிருவாகம், வாகன ஓட்டிகள், பயணிகள், பொழுது போக்காளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகிய பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைவாக கட்டாக்காலிகளைக் கைப்பற்றி அவற்றுக்கு தண்டப்பணம் விதிக்கும் திட்டம் அமுலாவசதாக அவர் மேலும் கூறினார்.
கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் நகர மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொண்டு நகர சபை நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நகர சபையால் கைப்பற்றப்படும் கட்டாக்காலிகளுக்கு 5000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுவதோடு 3 நாட்களுக்குள் அந்தக் கட்டாக்காலிகள் எவராலும் உரிமை கோரப்படாதவிடத்து அவை நகரசபையின் உரிமையாக்கபப்டும் என்றும் பொது மக்களை அறிவுறுத்தினார்.
கட்டாக்காலிகளால் நகர பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு நகரம் அசுத்தப்படுத்தப்படுவதாகவும் இதனால் நகர சபைத் தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 Comments:
Post a Comment