மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்சான் பெல்லன கலந்து கொள்ளவுள்ளார்.
இதில், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், எனப் பொருந்தொகையானோர் இரத்ததானம் வழங்கவுள்ளனர். இரத்தம் வழங்க விருப்பமுள்ள விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க ஒத்துழைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் இயக்கம் என இரத்தத்திற்கான தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெண்கள் இரத்ததானம் வழங்குவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. 5 வீதத்துக்கும் குறைவான பெண்களே இரத்த தானத்தில் ஈடுபடுகின்றனர். எனவே பெண்களும் இரத்ததானத்தினை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களின் உயிரைப் பாதுகாக்க உதவும் இரத்ததானத்தினை செய்வதற்கு பின்நிற்கின்ற மனோபாவமும் முன்வராமையும் காணப்படுகிறது. இரத்தம் வழங்குவதனால் உடலுக்குப்பிரச்சினைகள் ஏற்படும் என்ற தவறான எண்ணப்பாடு மாற்றமடைய வேண்டும்.
மட்டக்களப்பு இரத்த வங்கியானது சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்ற போதும் இரத்தம் வழங்குபவர்கள் போதாமை காரணமாக தட்டுப்பட்டை எதிர் கொண்டு வருகிறது. நடைபெறவுள்ள இரத்த தான் முகாமில் பங்குகொண்டு மாவட்டத்தின் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான இத் தேசிய பணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒத்துழைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொள்கிறார்.
0 Comments:
Post a Comment