இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தால் அதற்கு தனது பூரண ஆதரவு உண்டென்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த விவரங்களைத் வெளியிட்டுள்ளதாக அவரது ஊடகம் அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 19.09.2017 அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,
அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எதிரணியில் இருப்பவர்களை விமர்சித்து எதிர்ப்பதன் மூலம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப் சேரின் எதிர்பார்ப்பாகும்.
அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது எம்மை தமிழ் சகோதரர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
கிழக்கு மாகாணம் பிரிந்திருக்கும் போது எமக்கான சகல அதிகாரங்களும் அங்கு கிடைக்கும்.
மூவின மக்களுக்கும் சம உரிமை இம்மாகாணத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதல்வராக இருந்தார்.
இப்பொழுது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முதல்வராக உள்ளார்.
எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரமுடியும். இவ்வாறு மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக சம உரிமைகளைப் பங்கிட்டுக் கொள்வதற்குத் தோதாய் கிழக்கு மாகாணம் உள்ளது.
நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சராகவோ, முதல்வராகவோ வர முடியும்.
வேறு எந்த மாகாணத்திலும் அவ்வாறு வர முடியாது. கிழக்கு மாகாணத்தையும் வடக்குடன் இணைத்தால் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ வர முடியாது போகும்.
அவ்வாறான நிலை ஏற்படுமாயின் முஸ்லிம் சமூகம் கணக்கில் எடுபடாத சிறுபான்மை சமூகமாக மாறிவிடுவோம்.
எனவே, மூன்று இனமும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளோம்.
வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
கிழக்கு என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம். நாங்கள் ஆரம்பத்தில் திறமையான கிழக்கு மாகாண சபையொன்றை எவ்வித பிரச்சினையுமின்றி நிர்வகித்தோம். முதலமைச்சராக பிள்ளையான் இருந்த போது நான் அமைச்சராக இருந்தேன். விமலவீர திஸாநாயக்க, உதுமாலெப்பை, நவரெட்ணராஜா ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தனர்.
எங்களுக்கிடையில் எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பான முறையில் செயற்பட்டோம். எனவே, மீண்டும் கிழக்கு மாகாணத்தில் குழப்பம் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதையிட்டு மிகவும் கவலையடைகின்றோம்.
எனக்கும் ஸ்ரீலமுகா கட்சித் தலைவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் கிடையாது.
நான் மிகவும் கௌரவிக்கும் ஒருவராக ஹக்கீம் உள்ளார்.
நான் எந்த கட்சியில் இருந்தாலும் நான் ஸ்ரீலமுகா வைச் சேர்ந்தவன். அக்கட்சியின் ஆரம்ப கால போராளி என்ற ரீதியில் அக்கட்சி எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக அது பயணிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றேன்.
எனினும், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதுவரை தெளிவான முடிவினையோ – நிலைப்பாட்டினையோ அறிவிக்கவில்லை. நாங்கள் தமிழ் தலைமைகளுடன் பேசும் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு மு.கா. ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியமையாலேயே மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் மு.கா. தலைமைத்துவம் இது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை. இது ஆபத்தான நிலைப்பாடாகும்.
ஆகவே, ஸ்ரீலமுகா தலைமைத்துவம் அவ்வாறான கருத்துக்களை புறக்கணித்து “வடக்கு கிழக்கு இணைய இடமளிக்க மாட்டோம்” என தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment