கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் இன்றைய தினம் வியாழக்கிழமை (31) மாலை 4 மணிக்கு திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவுக்கும், பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவின் செலாளராக இருந்த திருமதி கலாமதி பத்மராஜா சுகாதார அமைச்சின் செலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கே.கருணாகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கும், வீதி அபிவிருத்தித்திணைக்கத்தில் பணியாற்றிய ஐ.கே.ஜீ.முத்துபண்ணா பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும், அதிலிருந்த எம்.டப்ளியூ.ஜீ.திசாநாயக்க கல்வி அமைச்சுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.பி.எம்.அசங்க அபேவர்த்தன ஆளுனரின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நிருவாக சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் கேட்டபோது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், இந்த இடமாற்றங்கள், புதிய ஆளுனரால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்ன நோக்கத்திற்காக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை. மத்திய அரசாங்கத்திலிருந்து இம்மாகாணத்துக்கென உள்வாங்கப்பட்ட செயலாளர்களை மாகாணத்துக்குள் தேவைக்கு ஏற்றவாறு இடமாற்றம் செய்வதற்கு ஆளுனருக்கு அதிகாரமிருக்கிறது.
இதற்கு சட்டரீதியாக , அரசியல் ரீதியான அமைச்சர்களிடம் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் அமைச்சரவையும், ஆளுனர் அவர்களும் மிகவும் நெருங்கிய உறவுகள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இவ்இடமாற்றம் ஒரு தடையாக இருக்காதா?
இருந்தாலும் இந்தச் செயலாளர்கள் கடந்த காலத்தில் அர்ப்பணிப்பாக நிருவாகத் திறனைக் கொண்டு செல்வதற்கும் சமூக சேவையைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எதிர்காலத்திலும் சிறப்பான சேவையை ஆற்றுவார்கள்.
இருந்தாலும் வியாழக்கிழமை (31) 4 மணிக்கு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டதன் மர்மம் என்ன என்பது ஆராயப்பட வேண்டிய விடமே என்றார்.
0 Comments:
Post a Comment