பண்டைய சரித்திரம் முதற் கொண்டு தற்போது வரை விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட எமது நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதுதான் தனது முன்னுரிமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மட்டக்களப்பு-பதுளைவீதி கரடியனாறில் 31.08.2017 வியாழக்கிழமை 81.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர் அங்கு கூடியிருந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி@
மட்டக்களப்பு நான் வாழும் பொலொன்னறுவைக்கும் இடையில் இறுக்கமான நெருக்கமான உறவு உள்ளது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டை எல்லா வகையிலும் ஸ்திர்படுத்த வேண்டும்.
விவசாயத்தை முன்னேற்றுவதற்காக நாம் அனைவரும் இணைந்து சேவையாற்ற வேண்டும்.
இந்த நாட்டு மக்களின் எதிர்காலம் விவசாய முன்னேற்றத்திலேதான் தங்கியிருக்கின்றது.
எமது சரித்திரமும் விவசாயத்தோடு சம்பந்தப்பட்டடதுதான்.
விவசாயத் துறையில் புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தி இன்னும் முன்னேற வேண்டும். எமது நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை பஞ்சு மெத்தை படாடோபங்களோடு கூடியது அல்ல. அது கரடுமுரடானது.
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வு சோகங்கள் துயரங்கள் நிறைந்தது.
எனவே விசாயத்தை மேம்படுத்துவது கொண்டுதான் விவசாய மக்களின் வாழ்விலும் ஒளியேற்ற முடியும்.
இந்த விடயத்திலே மத்திய மற்றும் மாகாண விவசாய அமைச்சுக்களுக்கு இந்தப் பொறுப்பு உண்டு.
மட்டக்களப்பு மாவட்டமும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். அதேவேளை இங்கு சுற்றுலாத்துறை மூலமும் நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கான பங்களிப்புக் கிடைக்கின்றது.
கரடியனாறு சேவைக்காலப் பயிற்சி நிலையம் இந்த மாகாண விவசாயத்துறைக்கு இன்றியமையாததாக இருக்கும்.
இந்த மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக நான் 25 மில்லியன் ரூபாவை மாகாண சபைக்குத் தருகின்றேன்.
திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தைப் போன்று மட்டக்களப்பிலும் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும்.
இதற்கு விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நான் ஒரு விவசாயியின் மகன். படாடோப வாழ்க்கை நடத்தியவன் அல்ல. எனது இரத்தத்திலே விவசாய ஊட்டச்சத்துத்தான் ஓடுகிறது. நான் வயல் வரம்புகளிலே திரிந்தவன். அதனால் எனக்கு விவசயரிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள்பற்றித் தெரியும்.
தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சி 14 மாவட்டங்களைப் பாதித்துள்ளது. 8 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க 310 கோடி செலவாகிறது.
வறட்சி காரணமாக நாட்டிலே உணவுப் பற்றாக்குறை, விவசாயத்துறையிலே அரைவாசி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
விவசாயத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்த விவசாயப் பெருங்குடி மக்களை பட்டினி போட விரும்பாமல் தான் பாரிய தொகையைச் செலவு செய்கின்றோம்.
இந்த மோசமான காலநிலை எமது அயல்நாடுகளிலும் உள்ளது.
எவ்வாறேனும் இது மாறும், எதிர்வரும் ஒக்ரோபெர் மாதம் உணவு உற்பத்திப் பேரைத் தொடங்க வேண்டும்.
ஓக்ரோபெர் முதலாவது வாரத்தை தேசிய விவசாயிகள் வாரமாகப் பிரகடனப்படுத்தி முழு நாடும் ஒரே நேர அட்டவணையில் செயலாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா அமைச்சுக்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் தடவையாக மட்டக்களப்பு –ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை வீதிப் பிரதேசத்திற்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்திருப்பது இதுவே முதற் தடைவையாகும்.
இப்பயிற்சி நிலையம் ஏக காலத்தில் சுமார் 100 அலுவலர்கள் பயிற்சி பெறக் கூடியதாகவும், அதேவேளை சுமார் 40 பேர் வதிவிடப் பயிற்சிகளைப் பெறக் கூடியதாகவும் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது. கடைசியாக அந்தப் பண்ணையில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
0 Comments:
Post a Comment