19 Aug 2017

மீராவோடை சக்தி வித்தியாலய காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

SHARE
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மைதான காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இப்பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு இரு தரப்பாரும் தீர்ப்பு கிடைக்கும் வரை காணிக்குள் செல்வதில்லை என்றும், தீர்வு பாடசாலைக்கு சாதகமாக கிடைக்கும் பட்சத்தில் காணிக்கு உரிமை கோருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், காணி உரிமை கோருவோருக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காணியை விட்டுக் கொடுத்து அக்காணிக்குரியவருக்கு மாற்றுக் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இரு சமூகங்களுக்கிடையில் உள்ள காணிப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர மூன்றாம் தரப்பில் குழப்பவாதி ஒருவரைக் கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இம்மகாநாட்டில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ரவி, ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுன, மீராவோடை சக்தி வித்தியாலய அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் தமிழ், முஸ்லிம் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: