26 Jul 2017

வயிற்றோட்டத்திற்கு சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக் குழந்தை பெட்டிப்பால் பால் புரைக்கேறி மரணம்.

SHARE
வயிற்றோட்டத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக் குழந்தை அதற்கு ஊட்டப்பட்ட பெட்டிப்பால் பால் புரைக்கேறியதில் மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடி வீதி, வந்தாறுமூலையைச் சேர்ந்த கிருபாகரன் அஸ்வின் (வயது 6 மாதம்) என்ற ஆண் குழந்தையே மரணத்தைத் தழுவியுள்ளது.

17.01.2017 அன்று பிறந்த இரட்டையர்களில் ஒருவரான இக்குழந்தைக்கு சென்ற வாரம் வயிற்றோட்டம் ஏற்பட்டதால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் சுகம்பெறாததால், திங்கட்கிழமை 24.07.2017 மாலை செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தாய்ப் பாலும், பெட்டிப் பாலும் அருந்தி வரும் இக் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் பெட்டிப்பாலை பருகக் கொடுத்து குழந்தையை தூங்க வைக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

செயற்கை சுவாசம் கொடுத்து குழந்தையை காப்பாற்ற வைத்தியசாலைத் தாதியர்கள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பபட்டதை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை முன்னெடுத்தார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: