26 Jul 2017

ஏறாவூர் நகரில் உணவு விடுதிகள். பேக்கரிகள் சுற்றி வளைப்பு

SHARE
நுகர்வோர் சுகாதார ஏற்பாடுகளின் கீழ் ஏறாவூர் நகரில் உள்ள ஒரு சில உணவு விடுதிகள். பேக்கரிகள் என்பன சுற்றி வளைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முத்துலிங்கம் புலேந்திரகுமார் தெரிவித்தார்.


செவ்வாய்க்கிழமை 25.07.2017 பிற்பகல் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பு பரிசோதனையின்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காலாவதியான உணவுகள், பாவனைக்கு உதவாத சுத்தமில்லாத பாத்திரங்களைப் பயன்படுத்தி தயாரித்த உணவுகள், மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பூஞ்சனம் பிடித்த பாண்கள் மற்றும் பேக்கரியில் தயாரித்த உணவுகள்,   இரசாயன பயன்பாட்டுக்குப் பாவித்து பின்னர் உணவு தயாரிக்க பாவித்த  கொள்கலன்கள், அச்சடிக்கப்பட்ட மை உள்ள பத்திரிகையை பயன்படுத்திப் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகள் போன்றவற்றை புலேந்திரகுமார் தலைமையிலான பொதுச்சுகாதார பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.

இதன்போது உணவு விடுதிகள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு அவர்களில் இரு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்ற மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: