மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக சட்ட வைத்திய அதிகாரி கடமையில் எவரும் இல்லை என அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை செவ்வாய்க்கிழமை 25.07.2017 தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்து வந்த சுரங்க பெரேரா சட்ட வைத்தியத்துறையில் உயர் கல்வியைத்; கற்பதற்காக கடந்த ஜுன் மாத இறுதியில் கனடா சென்று விட்டதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கான வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை.
இது குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இப்றாலெப்பையிடம் கேட்டபோது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரிக்கான வெற்றிடம் குறித்து தான் உடனடியாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்ததன் பேரில் கண்டி பொது வைத்தியசாலையிலிருந்து பதிலீடாக ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கடமையைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் தனக்கு சுகாதார அமைச்சிலிருந்து அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், பதிலீடாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி இன்னமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வரவில்லை.
இது பற்றி தான் மீண்டும் சுகாதார அமைச்சு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டுள்ளதாகவும் ஏற்ற ஒழுங்குகளை விரைவில் செய்ய சுகாதார அமைச்சு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறியத் தந்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக மட்டக்களப்பில் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி எவரும் கடமையில் இல்லாததால் நீதிமன்ற உத்தரவிற்கமைந்த மருத்துவ உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலங்களை குருநாகலுக்கு அனுப்பி சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர், எவ்வாறாயினும் பொதுமக்களினதும் அதிகாரிகளினதும் சிரமங்களைத் திவிர்த்துக் கொள்வதற்காக மட்டக்களப்புக்கு நிரந்தரமாக சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment