வீதிப் போக்குவரத்து என்பது விவசாயிகள் தொடக்கம் அலுவலர்கள் வரையில் அனைவருக்கும் சௌகரியமானதாக அமைந்திருக்க வேண்டும் என்பதால் வீதிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகக் கேட்டபோது அவர் புதன்கிழமை 19.04.2017 இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் விவரம் தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வீதி தொடர்பாக சில முடிவுகளை எடுத்திருந்தோம்.
மணல் வீதிகள் அனைத்தும் கிறவல் வீதிகளாகவும், கிறவல் வீதிகள் கொங்கிறீட் வீதிகளாகவும், தார் இடப்பட்ட பிரதான வீதிகள் அனைத்தும் காபெற் வீதிகளாகவும் அமைக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்மானமாகும்.
அந்த அடிப்படையிலே இனிவரும் காலங்களில் வீதி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் அமையும்.
கல்குடா தொகுதியில் இருந்து பட்டிருப்பு தொகுதி வரைக்கும் பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக ஆறு வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.
இதே போன்று இனியும் கிடைக்கும் ஒதுக்கீடுகளைக் கொண்டு வீதி அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கபப்டும்.
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான விவரங்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எங்களிடம் தருகின்றபோது தொடர்ந்தும் வீதி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.” என்றாரவர்.

0 Comments:
Post a Comment