அனைத்து சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மக்களும் இன சௌஜன்யத்தோடு வாழ்ந்த பாரம்பரியம் ஏறாவூருக்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க ஏறாவூரை அடுத்த சந்ததிக்கு அழகான நகரமாக நாம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரப் பகுதியை அகலமாக்கும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விஷேட கலந்தாலோசனைக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (28.02.2017) இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா அனைத்து சமூக மக்களின் சந்தைப்படுத்தல் அல்லங்காடியாகத்தான் ஏறாவூர் நகரம் இருந்து வந்திருக்கின்றது.
கல்வி பொருளாதார அபிவிருத்தி அத்தனையும் எல்லா மக்களுக்கும் அனுகூலமாக அமையக் கூடியதாக நன்கு திட்டமிடப்பட வேண்டும்.
அது இயற்கைச் சூழலுக்கும் இசைந்து கொடுக்கக் கூடியதாக அமைக்க வேண்டும்.
நகரத்தை உடைத்து அகலமாக்குவதால் வர்த்தகர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் காணிச் சொந்தக் காரர்களுக்கும் ஏற்படக்கூடிய இழப்புக்களையும் அசௌகரியங்களையும் மனிதாபினமத்துடன் அணுகி இந்த அபிவிருத்திகளை எல்லோரினதும் பூரண ஒத்துழைப்புடனும் செய்ய வேண்டும்.
இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதால் கடை மற்றும் வீட்டுரிமையாளர்களுக்கு ஏற்படக் கூடிய நஷ்டங்களுக்கும் இழப்பீடுகள் இல்லை.
அபிவிருத்திக்குத் தடையாக நீதிமன்றம் சென்றாலும் அது கைகூடாத நிலைமைகள் உள்ளன.
நடுத்தெருவிலிருந்து இருமருங்கும் 11.5 மீற்றர் உடையதாக ஏறாவூர் நகர கடைத்தெரு அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்திற்காக நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சு 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
வீதி விபத்துக்களற்ற இயற்கை எழில் நிறைந்த சௌகரியமான, பாதுகாப்பும் சுகாதாரமும் கொண்ட நகரத்தை அமைப்பதற்கு வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் 30 வருட கால யுத்தக் காட்சிகளின் சாட்சியாக இந்த நகரத்தை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியாளர் ரீ. பத்மராஜா உட்பட பிரதான கடைத்தெரு வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், ஏறாவூர் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment