10 Jan 2017

ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்ப் பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் இடம்பெயர் சேவை ஜனவரி 16 இல் முதலமைச்சர் தலைமையில் இடம்பெறும்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் இடம்பெயர் சேவை ஜனவரி 16ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.
ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் 16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த அமர்வில் பொது மக்கள் தங்களது காணிப்பிணக்குகளை முன் வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ் நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப்  பிரிவுகளிலும் வசிக்கும்  பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக முகங் கொடுத்து தீர்வின்றித் தடுமாறுவதனால் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த காணிப் பிணக்குகள் சம்பந்தமான அமர்வில் கிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், மாவட்ட நில அளவை அத்தியட்சகர்கள், வனத் திணைக்கள அலுவலர்கள், காணிப் பயன்பாட்டு அலுவலர்கள், சமாதான நீதிவான்கள் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: