13 May 2016

சாய்ந்தமருதில் கடத்தப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாயிலிருந்து மீட்பு

SHARE
கல்முனை பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது ஸாஹிறா பாடசாலை வீதியிலுள்ள வீட்டிலிருந்து கடத்தப்பட்ட 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாயிலிருந்து வியாழக்கிழமை 12.05.2016 மீட்கப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 08.05.2016 அன்று சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸார் அவர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய போது அவர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டிருந்தனர்.

10.05.2016 அன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப் பட்டபோது சாட்சிகளால் அடையாளங் காட்டப்பட்ட சந்தேக நபர்களான கல்முனை, சேனைக்குடியிருப்பு விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த லோகராசா சுகிர்தராசன் (வயது 23) மற்றும் பள்ளி ஒழுங்கை, கல்முனைக்குடி 9 ஐச் சேர்ந்த முஹம்மத் உவைஷ் (வயது 36) ஆகியோரை மே 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் றஸாக் உத்தரவிட்டார்.

பெண் கடத்தப்படும்போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால் கைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆதாரமாகக் கொண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 5 ஆம் திகதி இரவு வீட்டில் இருந்தபோது கடத்தலுக்குள்ளான பெண் தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் பயனாக பெண்ணின் கடத்தலோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபராக பெண்ணின் முன்னாள் கணவரும் தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாருக்கக் கிடைக்க இரகசிய தகவலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பெண் அவரது முன்னாள் கணவருடன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பொலிஸார் வியாழக்கிழமை காலை பெண்ணை மீட்டதுடன் பெண்ணின் முன்னாள் கணவரையும் கைது செய்துள்ளனர்.

கல்முனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் தற்சமயம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பெண்ணின் முன்னாள் கணவரை நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: