காட்டு யானை தாக்கியதில் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி 1, மற்றும் சித்தாண்டி 3 ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு வயோதிபர்கள் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சித்தாண்டி 1 காளிகோயில் வீதியைச் சேர்ந்த 60 வயதான பிள்ளையான் சாமித்தம்பி, மற்றும் பெருமாவெளி ஈரளக்குளத்தைச் சேர்ந்த எஸ்.செல்லத்தம்பி வயது 72 ஆகியோரே கால்கள் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் நடந்த சம்பவத்தில் மாடு மேய்ப்பவரான பிள்ளையான் சாமித்தம்பி என்பவர் முறாக்கமடு எனும் காட்டுப் பகுதியில் தனது மாடுகளை பட்டியடிக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது காட்டோரம் வழியருகே மறைந்திருந்த காட்டு யானை வழி மறித்துத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, திங்கட்கிழமை (07) குடாவெட்டை வயலோரம் நடந்த சம்பவத்தில் பெருமாவெளி ஈரளக்குளம் வாசியான 72 வயதான செல்லத்தம்பி என்பவர் அவ்வழியே வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உறுப்புக்கள் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் பற்றி தாம் விசாரித்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment