16 Jul 2020

நமது அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைத்து கொண்டு மாற்று சமூகத்திடம் சண்டை இடுவதில் என்ன நியாயம் இருக்கிறது - சந்திரகுமார்.

SHARE
(சுதா )

நமது அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைத்து கொண்டு மாற்று சமூகத்திடம் சண்டை இடுவதில் என்ன நியாயம் இருக்கிறது - சந்திரகுமார்.
முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை விட கல்வி ,பொருளாதார ரீதியாக வளர்ந்து விட்டது. இதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதற்கு யார்  தான் காரணம்? முஸ்லிம் சமூகம் காரணமா? அல்லது நமது அரசியல் தலைமைகள் காரணமா? கேள்விக்கு தமிழ் மக்கள் வாக்கின் மூலமாக பதில் வழங்க வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பு ஊறணிப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. நாம் முஸ்லிம் சமூகத்தோடு முரண்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. நமது அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைத்து கொண்டு மாற்று சமூகத்திடம் சண்டை இடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

முஸ்லிம்கள் எப்பவுமே எதிர்ப்பு அரசியல் செய்தது கிடையாது. அவர்கள் எப்பவுமே ஆளும் கட்சியுடன் இணைந்து இணக்க அரசியல் செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்கள். நம்மவர்கள் தேர்தல் காலங்களில் வருவார்கள், இனம், மொழி, தேசியம், தன்னாட்சி என்று பேசி மக்களை மயக்கி தேர்தலில் வென்றதும். தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் வளப்படுத்தி கொள்வார்கள். 

ஏழைத் தமிழ் மக்கள் மீண்டும், மீண்டும் அடிமையாக்கப்படுவார்கள். நாங்கள் வேலை வாய்ப்பை கேட்டால் அரசியல் தீர்வை பற்றிப்பேச முடியாது என்பார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய சொகுசு பங்களாவையும், சொகுசு வாகசங்களையும், பெற்று கொள்வார்கள்.

அரசியல் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் தன் விருப்பப்படி அரச அதிகாரிகளை நியமித்து தன் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்தார்கள். நாம் அடிமைகளாக மட்டுமின்றி ஏழைகளாக வாழ்வதற்கு முழுக் காரணமும் நமது அரசியல் தலைமைகளே தவிர முஸ்லீம்கள் அல்ல. 

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழர்கள். ஆனால் கடந்த முறை கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். இதற்கு யார் காரணம்?  முஸ்லிம்ங்களா? நம்மை முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் அடகு வைத்தது தமிழ் அரசியல் தலைமைகள். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். 

முதலில் நிர்வாகங்களை கைப்பேற்றினார்கள், பின்பு நிலங்களை கைய்பேற்றினார்கள், அரச வேலை வாய்ப்புகள் அத்தனையையும்.  முஸ்லிம்களே பெற்று கொண்டார்கள். 

முஸ்லீம்கள் ஆட்சி செய்தாலும் பரவாயில்லை கிழக்கு தமிழன் கிழக்கை ஆளக்கூடாது என நினைக்கும் மேட்டுக்குடியினரின் சிந்தனையே கிழக்கு தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியது. 

இனிமேலாவது உணர்ச்சி அரசியலுக்கு ஆளாகாமல் இணக்க அரசியலில் பயணித்து எமது வாழ்வை வளமாக்கி கொள்வோம். இதனைக் கிழக்கு தமிழர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: