16 Jul 2020

மக்களின் சம்மதம் பெறாத அரசியல் சாசனமே அமுலில்.

SHARE
(ராஜ்)

மக்களின் சம்மதம் பெறாத அரசியல் சாசனமே அமுலில்.
அமுலில் உள்ள அரசியல் சாசனம் மக்களின் சம்மதத்தை பெறாத ஒரு அரசியல் சாசனம் அது சிறுபான்மை மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் ஒரு அரசியல் சாசனம் அல்ல எனவே நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு புதிய  அரசியல் சாசனத்தை அரசாங்கம் புதிய பாராளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் கொண்டுவர வேண்டும் அதற்கு த.தே.கூ ஒரு பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்த்திற்கு செல்ல வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (14) திருகோணமலை மூதூர் கிளிவெட்டி வட்டாரம் பாரதிபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் துரைநாயகம் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் வேட்பாளருமான க.குகதாசன் மற்றும் வேட்பாளர்களான கந்தசாமி ஜீவரூபன் செல்வராஜா பிரேமரதன் இரா.சச்சிதானந்தம், சுலோசனா ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடரந்து மேலும் உரையாற்றிய இரா.சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பாக இந்த நாட்டை ஆட்சி செய்த பெரும்பாலான ஜனாதிபதிகளுடன் நாம் பேசி இருக்கின்றோம். இந்நிய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 திருத்தச்சட்டத்தில் மாகாணசபை அதிகாரம் கிடைத்த போதும் அதன் முழு அதிகாரத்தையும் அரசாங்கம் எமக்கு வழங்கவில்லை.
நாம் கேட்கின்ற அதிகாரம் சர்வதேசத்தில் உள்ளது போன்ற ஒரு தீர்வினையே கேட்கின்றோம். இதை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளது. இந்தியாவும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.தற்போதய இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டாவது நாளே அழைத்து தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அழுத்தமாக கூறியுள்ளார்.

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னால் இந்திய பிஜரதமர் மன்மோகன் சிங்கிற்கும் உறுதியளித்துள்ளார். எனவே அரசாங்கம் தொடரந்து சாட்டுச் சொல்லி எம்மை ஏமாற்ற நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். ஏன்றார்.

மேலும். புத்தபெருமானை நாம் மதிக்கின்றோம் அவருடைய போதனைகளை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அவருடைய போதனைகளை சொல்லிக்கொண்டு வருபவர்கள் எமது மக்களின் காணிகளையும் வரலாற்றையும் கபளீகரம் செய்கின்றார்கள்.

இந்தச் சூழலில் தான் நாம் பொதுத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான பிளவுபடாத நாட்டுக்குள் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வினை கோருகின்ற விடயத்திற்கு மக்களுடைய ஆதரவு உள்ளது என இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும். எனவே வாக்குகளை சிதறடிக்காமல் த.தே.கூ உங்கள் வாக்குகளை வழங்குகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: