பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்.
திருகோணமலை மாவட்டச் செயலகம், இளைஞர் அபிவிருத்தி அகம், ஈவிங்ஸ் அமைப்பு என்பவை இணைந்து வெள்ளிக்கிழமை (06) மாவட்டத்திலுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் சமூக மட்ட பெண்களின் பங்குபற்றலுடன் 16 நாள் செயல்வாத நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.
திருகோணமலை நகர பஸ்நிலைய முன்றலிலும் சுற்றுவட்டாரத்திலும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபவனியும் தெருவோர நாடகமும் விழிப்புணர்வுப் பிரசுரங்களை ஒட்டுதலும் இடம்பெற்றன.
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன்;, திருகோணமலை பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவினர், திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மாவட்ட, பிரதேச செயலகங்களின் மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள், ஈவிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் காயத்திரி நளினகாந்தன் உட்பட செயற்பாட்டாளர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் ஈவிங்ஸ் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொண்டனர்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் இடம்பெறும்பொழுது அதுபற்றி பொதுமக்கள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் இலகு வழிமுறையிலமைந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டன.
“பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாதொழிப்போம், வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம், வன்முறைகளற்ற வீடுகளையும் சமூகத்தையும் உருவாக்குவோம், பொது இடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது பாதிக்கப்பட்டோரின் உரிமை, பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாத்து அவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்” உள்ளிட்ட இன்னும் பல்வேறு தொனிப் பொருள்களில் அமைந்த அவசர முறைப்பாட்டு இலங்கங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பரவலாகப் பொது இடங்களில் ஒட்டப்பட்டன.
அத்துடன், பெண்கள் சிறுவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், கடத்தல்கள், கொடுமைப்படுத்தல்கள், சித்திரவதைகள், சுரண்டல்கள், மனித உரிமை மீறல்கள், இளவயதுத் திருமணம், பாதுகாப்பின்றியும் பராமரிப்பின்றியும் கைவிடல் உள்ளிட்ட பல்வகைப் பாதிப்புக்கள் இடம்பெறாமல் பாதுகாப்பது ஒட்டு மொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் என நிகழ்வில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு
(வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இச்செயல்
திட்டத்தை அமுல்படுத்துகிறது.
0 Comments:
Post a Comment