உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில் இடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் தற்போது சேறு பூசியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப்பகுதிகளில் திங்கட்கிழமை (28) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
“வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையிலேயே செவ்வாய்கிழமை எங்களுடைய மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பினை பார்க்கின்ற போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கு முழுவதும், பூரண கடையடைப்பினை மேற்கொண்டு ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்களுடைய மக்களுக்கு நன்றி.
உண்மையிலேயே இதற்கான ஆரம்பம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தியாகி திலிபனினுடைய நினைவேந்தல் தினத்தினை தடை செய்து, நான் உட்பட எங்களுடைய வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவிலிருந்து ஆரம்பித்த இந்த விடயம் இரண்டு வாரங்களுக்கு அடுத்து நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் அதாவது, இந்த நாட்டில் உயிரிழந்த ஒருவரை நினைவு கூர்வதற்கு, நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்ற வகையில் இந்த நாட்டுக்காக ஜனநாயகம் பிரார்த்தித்து நாங்கள் சில ஆலயங்களில் செய்த மதவழிபாடுகளுக்கும் நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்ட தடையுத்தரவினை அடுத்து, செவ்வாய்கிழமை அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஹர்த்தாலிற்கு வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளமையினை பார்க்கும் போது சந்தோசமாகவுள்ளது.
எங்களுடைய மக்களுடைய மனங்களில் அந்த உணர்வு தற்போது இன்னும் அதியுச்ச அளவில் இருக்கின்றது என்பதனை இந்த ஹர்த்தாலில் கிடைத்திருக்கின்ற பூரண ஒத்துழைப்பினை பார்க்கின்ற போது புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.
உண்மையிலேயே கடந்த தேர்தலில் பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லியிருந்தாலும், உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில் இடமில்லை. தமிழ் மக்கள் அபிவிருத்தியினை மட்டும்தான் விரும்புகின்றனர் என சொன்னவர்களுக்கு இது அவர்களுடைய முகத்தில் சேறு பூசுகின்ற நிகழ்வாகவே நான் பார்க்கின்றேன்.
உண்மையிலேயே இந்த ஹர்த்தாலினை அனுஸ்டித்து, இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமிழ் மக்கள், தமிழனின் உணர்வுதான் முக்கியம், தமிழ்த் தேசியம் முக்கியம், அபிவிருத்தி என்பது மட்டுமல்ல தமிழ்த் தேசியத் தேசியத்துடன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பயணிக்கின்றனர் என்ற ஒரு ஆணித்தரமான செய்தியினை இந்த இடத்தில் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஜனநாயகத்திற்கான இளைஞர் என்ற தலைப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கூட நான் குறிப்பிட்டிருந்தேன். உண்மையிலேயே ஜனநாயகத்திற்கான இளைஞர் என்ற தலைப்பினை செய்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் கூட எனக்கு, அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில தடைகள், நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்டிருந்தமை ஒரு வேடிக்கையான விடயம் என்பதனை சொல்லியிருந்தேன்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவருக்கும் விசேடமாக நான் இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும், இந்த ஹர்த்தாலுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கியமைக்காக. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும், தவிசாளர்களுக்கும், மாநகர, நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றேன்.
மேலும், தமிழ்த் தேசியத்தோடு பயணிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment