21 Feb 2019

முச்சக்கர வண்டிச் சங்கங்கள் தொடர்ந்து சட்டத்திற்கு முரண்பட்டால் மட்டக்களப்பு நகரத்திற்குள் இலவச பஸ்சேவை ஆரம்பிக்கத் தயங்க மாட்டேன். மாநகர பிதா எச்சரிக்கை

SHARE
முச்சக்கர வண்டிச் சங்கங்கள் தொடர்ந்து சட்டத்திற்கு முரண்பட்டால் மட்டக்களப்பு நகரத்திற்குள் இலவச பஸ்சேவை ஆரம்பிக்கத் தயங்க மாட்டேன்.
மாநகர பிதா எச்சரிக்கை
முச்சக்கரவண்டிச் சங்கங்கள் ஒழுங்கு முறைக்குள் வராமல்; சட்டத்துக்கு முரணாக தொடர்ந்து செயற்படுமாயின் பொதுமக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரத்துக்குள் இலவச பஸ்  சேவையை ஆரம்பிக்க வேண்டி வரும்  என மட்டடக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் புதன்கிழமை 20.02.2019 நடாத்திய  ஆர்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் இதனைக் கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் பல விதமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் பல சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் செயற்படுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சம்மந்தமாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றது முச்சக்கரவண்டி சாரதிகளில் பலர் நியாயமாக நடந்துகொண்டாலும் சிலரது செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக மக்கள் எங்களிடம் முறையிட்டு வந்துள்ளனர்.

அந்தவகையில் முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேசவேண்டும் என எமது மாநகரசபை ஆணையாளர் ஒருவாரத்துக்கு முன்னர்; அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 7 முச்சக்கரவண்டி செலுத்துபவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆணையாளர் அனைவரையும் அழைக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக முச்சக்கரவண்டி சங்கம் முச்சக்கரவண்டி சாரதிகளை கலந்துரையாடலுக்கு வருமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தா.

இதனையடுத்து கடந்த 19ம் திகதி அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு சிலர் வந்திருந்தனர் வெளியில் ஒரு சிலர் நின்றனர்.

சந்திப்பிற்கு வருபவர்களின் பெயர்களை வருகைப்  பதிவு செய்வது வழமை. உள்ளே வந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டார்கள்.

ஆனால் ஓட்டோ சங்கம் என்று சொல்பவர்கள் கூட்டத்திற்காக வருகை தந்தமைக்காக எங்களது பெயர்களை பதிவு செய்யமாட்டோம் என்றனர்.

இந்த நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகரசபை கட்டளைச் சட்டம் 372-; 32ம் பிரிவின்படி அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் தமது வியாபார நடவடிக்கையில் மாநகர சபையில் பதியப்படவேண்டும் என சில விதிமுறைகளை விதித்தோம்.

ஆனால் இதுவரை எந்தவொரு முச்சக்கரவண்டி சாரதிகளும் பதியவில்லை இது பாரிய சட்டவிரோதமான செயற்பாடு.

முச்சக்கரவண்டி பற்றி ஒரு முறைப்பாடு வரும் பட்சத்தில் இந்த பதிவு எங்களுக்கு உதவி செய்யும் ஆனால் பதிவு இல்லாத காரணத்தினால் எங்களுக்கு இதனை முன்னெடுக்க முடியவில்லை.

எனவே பொதுமக்களது பாதுகாப்பிற்காக இவ்வாறான ஒழுங்கு முறைகளை கொண்டு வரவேண்டும்.

கடந்த வாரம் ஒரு முச்சக்கரவண்டி சாரதியினால் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயம் தெரிய வந்தது.

இந்த நிலையில் மாநகரசபை ஒரு இறுக்கமான நடைமுறைக்கு வரவேண்டியது எங்களது கடமையாகும்.

மாநகரசபையில் பதியப்பட்டு மாநகரசபையினால்; ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்களிலே அவர்கள் தங்களது முச்சக்கர வண்டிச் சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இங்கு சில முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் பதியப்படவில்லை. எனவே இவை அனைத்தும் வீதி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாநகர சபை ஆகிய மூன்று திணைக்களமும் சேர்ந்து எவ்விடத்தில் தரிப்பிடம் அமைப்பது எவ்வளவு பேரை வைப்பது என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது.

எனவே அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் மிகவிரைவில் பதிந்து தங்களது நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டும். பதிவு அற்ற முச்சக்கரவண்டிகளி;ன்  செயற்பாடுகளுக்கு இனி தடைவிதிக்கப்படும்.

மாநகரசபை நியதிச் சட்டத்தை அமுல்படுத்தும் போது அதை அரசியலாக்கப் பார்க்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது எனக் கூறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அருகதையில்லை.

வங்குரோத்து அரசியலை சில அரசியல் வாதிகள் செய்கின்றனர்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: