31 Jul 2026

அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் கட்டடப் பணிகள் ஆரம்பம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள்,

SHARE

அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் கட்டடப் பணிகள் ஆரம்பம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள், அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படும் இந்த இல்லத்தின் கட்டிடப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. 

என தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார். 

மட்டக்களப்பில் மாற்றுதிறனாகளுக்கா வேண்டி அமைக்கப்பட்டுவரும் அம்மை அப்பன் இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை(31.07.2027) மட்டக்களப்பு கல்லயிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

இந்த இல்லத்தில் 24 அறைகள், ஒவ்வொரு அறைக்கும் தனிக் குளியலறை, மையத்தில் ஒரு மண்டபம், நாட்சியார் அமைப்பில் மைய கட்டிடம், மருத்துவ அறை, அலுவலகம் ஆகியவற்றுடன், மாடியிலிருந்து அழகிய கடற்கரையையும் மைதானத்தையும் இரசிக்கக்கூடிய வகையில் இந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது.  

50 மாற்றுத்திறனாளிகள் தமது துன்பமான காலத்தில் இந்த அம்மை  அப்பன் இல்லத்திற்கு வந்து தங்கி, தம்மைத் தேற்றிக் கொண்டு, மீண்டும் சமூகத்தோடும் தங்கள் குடும்பத்தோடும் இணையும் வழிவகைகள் இந்த இல்லத்தில் செய்யப்பட்டிருக்கும். அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் இந்த இல்லம் நடத்தப்படும். 

இந்த இல்லம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் திணைக்களங்களிலிருந்தும் அனுமதியும், தடையில்லாச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. இதைப் பகிரங்கமாக டெண்டர் முறை மூலம், கட்டுவதற்கான ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி, இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது ஊர் கூடி இழுக்கும் தேர்; அனைவரது அன்பினாலும், நிதி உதவியினாலும், ஆக்கத்தினாலும்தான் இந்தக் கட்டிடம் கட்டப்பட முடியும். அனைவரும் இந்தக் கட்டிடப் பணியில் வந்து இணையுமாறு அன்போடு கேட்டுக்ககொள்கிறோம். 

எமது மாற்றுத்திறனாளிகளுக்காக, எமது மக்களால் கட்டப்படும் இந்த இல்லத்தின் முதற்பகுதி இன்னும் 500 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு, 2028 தை மாதத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கும் இலக்கோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம். 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் யுத்தத்தால் பாதிப்படைந்து மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட எமது சகோதர சகோதரிகள் சிலரின் கஷ்டங்கடள அறிந்துகொண்ட  எமது புலம்பெயர் உறவுகள் தமிழ் பரா ஸ்போர்ட்ஸ் (Tamil Para Sports) ) எனும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் இங்கிலாந்திலும், டேட்டா சரிடி   (DATA Charity) ) எனும் அரசு சாரா நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்டு நன்கெடைடயாளர்களிடமிருந்து உதவிகளைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காகவும், நிலையான வாழ்விற்காகவும் மாற்றுவதற்கு ஒரு பாலமாக செயற்பட முன்வந்தது. 

இதன் முதற்கட்டமாக, மாற்றுத்திறனாளிகளைப் பேசுபொருளாக்க வேண்டும் என்ற நோக்கோடு, 2016 ஆம் ஆண்டு "(Tamil Para Sports)  என்ற நிகழ்வை நடத்த ஆரம்பித்தோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கிராமங்கள்தோறும் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் நிர்வாக ரீதியில் பலப்படும் வகையில் ஒவ்வொரு அமைப்புளோடும் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். அந்தப் போட்டிகள் பல மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சர்வதேச நிகழ்வுகளிலும் பங்குபற்றுவதை நாங்கள் காண்கிறோம். அதேவேளை, பல்வேறு நலத்திட்டங்களில் இந்த மாற்றுத்திறனாளிகள் உள்வாங்கப்படுவதற்கு (Tamil Para Sports)  ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம்.  

(Tamil Para Sports) ஆரம்பித்த காலத்திலிருந்தே, தமக்கான ஒரு இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்கள். சிறுவர் இல்லங்கள் சிறப்பாக இயங்குகின்றன, முதியோர் இல்லங்கள் சிறப்பாக இயங்குகின்றன. அதேபோல் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் ஒருசேர உள்ளடக்கக்கூடிய ஒரு இல்லம் அமைக்கப்பட வேண்டும் அந்த இல்லம் மாற்றுத்திறனாளிகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவடமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். 

கட்டடச் செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஆராய்ந்து கொண்டிருந்த நேரத்தில், எங்களோடு பயணித்தவர்கள் சிலர் அனுபவித்த மரண வலிகளும், உயிரோடான போராட்டங்களும் காரணமாக, இந்தக் கட்டிடத்தைக் கட்டுவது என்று உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டோம்.  2022 இல் "(Tamil Para Sports) " மட்டக்களப்பில் நடைபெற்றபோது,  எங்களோடு வந்து விளையாடிய மிதுஷன் என்ற இளைஞன் படுக்கைப் புண்ணால் பாதிக்கப்பட்டு, ஒரு வருடகாலத்தில் உடல் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அவரது வீட்டில் தன்னைக் குணப்படுத்திக் கொள்வதற்குப் போதுமான வசதி இல்லாததால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இது ஒருவர் மட்டுமல்ல் இந்த மண்ணில் எங்களோடு வாழும் பலரும் இவ்வாறு துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள், சிலர் இறந்தும் இருக்கிறார்கள். இதுபோன்ற வலியோடு கூடிய மரணங்கள் இனிமேல் நிகழக்கூடாது என்பதே மையப்படுத்திய இந்த இல்லத்தைக் கட்ட முற்படுகிறோம். என அவர் இதன்போது தெரிவித்தார். 








SHARE

Author: verified_user

0 Comments: