மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை 25.06.2018 காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெறும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நாடு தழுவிய ரீதியிலும், தலைநகர் கொழும்பிலும் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் முகமாகவே தாம் மட்டக்களப்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் (UPTO) தெரிவித்துள்ளது.
அதனால் சகல அஞ்சல்துறை பணியாளர்களையும் மட்டக்களப்பு பிரதான அஞ்சலகத்தின் முன்னால் திங்கட்கிழமை காலை 8.45 மணிக்கு வருகை தந்து கவன ஈர்ப்பில் கலந்து கொள்ளுமாறு சங்கம் கேட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராதான அஞ்சலகத்திற்கு முன்னால் தொடங்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபதி காரியாலயத்திற்குச் சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,
5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,
கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,
ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,
2012 பொறுப்புப் பரீட்சையை (Charge Exam) நடைமுறைப்படுத்து,
பொறுப்புக் கொடுப்பனவை(In charge Duty Allowance) உடனடியாக வழங்கு,
விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,
பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியொகத்தர்களுக்கு எம்.என். (MN) 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு என்பனவற்றுடன் மேலும் அரசாங்கத்தின் மூடிய திணைக்கள ஆட்சேர்ப்பு முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ஆம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன.
0 Comments:
Post a Comment