27 Feb 2018

காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் 9வது காதி நீதிபதியாக உமர்லெப்பை நியமனம்.

SHARE
காத்தான்குடி காதி நீதிமன்ற நீதி பரிபாலனப் பிரிவின் ஒன்பதாவது காதி நீதிபதியாக பிரபல சமூக சேவையாளர் முஹம்மது சரீப் உமர்லெப்பை நீதிச் சேவை ஆணைக்குழுவினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கான கால எல்லையில் கடந்த 2017ஆம் ஆண்டும் காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த இவரது நியமனம் மேலும் அடுத்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சமூக சேவையாளரான முஹம்மது சரீப் உமர்லெப்பை பல்வேறு பொது அமைப்புக்களில்; பொறுப்புக்களை வகித்து பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலின் முன்னாள் தலைவராகவும், வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவராகவும், வடகிழக்கு கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் நீண்டகால பொருளாளராகவும் இருந்து  பணியாற்றியுள்ளார்.

இறையில்லமான பள்ளிவாயலுக்கு இவர் தனது சொந்த காணியை வக்பு செய்ததன் மூலமாக இவரது பெயரில் 'உமர்சரீப்” என்ற பள்ளிவாசலொன்று காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ளது.

1978ம் ஆண்டு விவசாய உத்தியோகத்தராக நியமனம் பெற்று இவர் அச்சேவையில்  13 வருடங்கள் கடமையாற்றிய பின்னர் 1991ம் ஆண்டு கிராம சேவையாளராக கடமையேற்று 2012ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கிராம சேவகராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் என்ற அடிப்படையில் அரசின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: