வடபிராந்திய போக்குவரத்துச் சபை தொழிற்சங்கம் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பினால் அவர்களால் நடாத்தப்படும் பஸ்சேவைகள் முடங்கியுள்ள போதும் கிழக்கு மாகாணத்தின் சகல பஸ் சாலைகளிலிருந்தும் வழமைபோன்று வடக்கிற்கான பஸ் சேவைகள் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போக்குவரத்துச் சாலைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலுமிருந்து வியாழக்கிழமையும் 30.11.2017 யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்; மற்றும் தலைமன்னாருக்கான இலங்கைப் போக்கு வரத்துச் சேவைகள் தங்கு தடையின்றி இடம்பெறுவதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பாடசாலை வருட இறுதித் தவணைக்கான பரீட்சைக் காலமாகவும், க.பொ.த. சாத பரீட்சை நெருங்கும் காலமாகவும் இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கு தடையின்றிப் பயணிக்க வேண்டியுள்ளது.
அதேவேளை வருட இறுதி அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்ற இன்னும் பல அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோரும் தமது கடமைக்காக பயணிக்க வேண்டியுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு தமது பஸ்சேவைகள் தங்கு தடையின்றி இடம்பெற ஆவன செய்துள்ளதாக கிழக்கு மாகாண பஸ் சாலைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடபகுதிக்கான தனியார் பஸ் சேவைகள் அனைத்து வழை போன்று எதுவித தங்கு தடைகளுமின்றி நாடெங்கிலுமிருந்தும் இடம்பெறுவதாக தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment