அரசியலமைப்பு, தமக்குள்ள உரிமைகள் தொடர்பிலும், சட்டம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் பிரஜைகளின் இணைய தளம் மும்மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே தெரிவித்தார்.
இது தொடர்பாக பொது மக்களுக்குத் தகவல் எட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை (21) அவர் ஊடகங்களுக்கு விவரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், தகவல் அறியும் உரிமை என்பது 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட, மக்களது இறைமை அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அடிப்படை உரிமை ஒன்றாகும்.
அந்த வகையில் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தமக்குள்ள அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், தொழிலுரிமைகள் தொடர்பிலும் அரசியலமைப்பு உட்பட சகல சட்டங்களும் விதிகளையும் உள்ளடக்கியதாக பிரஜைகளின் சார்பில் மும்மொழியிலான இணைய தளம் முதன் முதலாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஏற்புடைய உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கள் உட்பட ஏனைய முக்கிய வழக்குத் தீர்ப்புக்கள், அரச மற்றும் பொது நிறுவனங்களின் பிரஜைகளுக்குத் தேவையான படிவங்கள், பிரஜைகள் செயற்பாட்டுக்குத் தேவையான தகவல்கள், பிரஜைகள் செயற்பாட்டின் மூலம் பெற்றுக் கொண்ட வெற்றிகள், பிரஜைகள் சபைகள் பற்றி தகவல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இணையத் தளத்திலிருந்து பிரஜையொருவர் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அரச மொழிக் கொள்கைகளுக்கு அமைய சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவலைப் பெறும் இணைய தள முகவரி www.citizenslanka.org
0 Comments:
Post a Comment