எமது உறவுகளை தேடி, நாம் அகிம்சை வழியில் மேற்கொள்ளும் போராட்டங்கள் அரச புலனாய்வு துறையினரால் கண்காணிக்கப்படுவதானது இன்னும் தொடர்கின்றது. இச்செயற்பாடானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் பாதிப்படைய செய்வதாகும்.
என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வியாழக் கிழமை (16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (16) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாழிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக கலந்து கொண்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அ.அமலநாயகி தெரிவித்தார்.
வடக்கு கிழக்கை சேரந்த 32 பேர் இதில் கலந்து கொண்டிருந்தனர். அக்ககோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
வன்கைதுகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதும் விசாரணைகள் தாமதமாவது ஏன்? விசேட விசாரணை குழுக்கள் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட போதும் அவர்களது விசாரணை பக்கச்சார்பாக காணப்பட்டமை நீதி தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
2000ம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் 600 க்கும் மேற்பட்ட எமது உறவுகள் வீடுகளில் உணவருந்தி கொண்டிருந்த போதும், வயல் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் ஏன் வீதியில் பயணம் செய்யும் போதும் மனைவி பிள்ளைகள் தாய் தகப்பன் நண்பர் உறவினர் முன்னிலையில் வலிந்து இழுத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் ஆயுதக்குழுவுடன் எவ்வித தொடர்புமற்றவர்களாவர்.
வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த போது வெள்ளைவானில் வந்த அதிரடிப்படை என இனங்காணப்பட்டோரால் இழுத்துச்செல்லப்பட்ட கணவனை தேடி, அதிரடிப்படை முகாமுக்கு மகனை அழைத்து சென்ற தாய், கணவனுடன் மகனையும் தொலைத்த நிலை எமது கண்ணீர் வரலாறுகளுக்கு உதாரணமாகும்.
எனவே, எமது உறவுகளின் இன்றைய நிலை தொடர்பான உண்மையானதும் நீதியானதும் விரைவானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எமக்கு தகவலும் நீதியும் வழங்கப்படவேண்டும். எமது உறவுகள் எம்முடன் இணைக்கப்பட வேண்டும்.
மாறாக கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக துணைப்படையுனருடன் இணைந்து இலங்கை அதிரடிப்படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்குக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில், அண்மையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக நீதி எமக்கு வழங்கப்படுமா? என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.
அத்துடன் கடந்த காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்திலெடுக்கப்பட வேண்டியதும் அவசியமாhகும்.
1. 1990.08.09ம்திகதி அன்று புனானை மயிலம்கரச்சி என்னும் பகுதியில் 39 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்
2. 1990.02.08ம் திகதி மூன்று தடவைகள் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டு சித்தாண்டி முருகன் கோவிலில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த 89 ஆண்கள் இராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
3. 1990.09.09ம் திகதி சத்துருக்கொண்டானில் சிறுவர்கள், பெண்கள், கற்பிணித்தாய்மார், முதியோர், வலதுகுறைந்தோர், ஆண்கள், யுவதிகள் 186 பேர் இராணுவத்தினரால் சுற்றிவழைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.
4. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வாகரையில் 11 பேர் காணாமல் செய்யப்பட்டனர்.
5. 1990.09.20ம் திகதி சவுக்கடியில் 67பேர் இராணுவத்தினரால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
1990.09.05 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இடடம் பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை சுற்றி வளைத்து அதில் குறிப்பாக 158 இளம் வயது ஆண்களை வற்புறுத்தலில் கைதி செய்து கொண்டு சென்றனர்;. மேற்கூறப்பட்டவை சில உதாரணங்களே ஆகும்.
இக்காலப்பகுதியில் பின்வரும் பெயர்களை கொண்ட இராணுவத்தினர் பொறுப்பதிகாரியாக செயற்பட்டனர்.
கப்டன் முனாஸ்,கப்டன் பாலித்த,கப்டன் குணரெட்ன, மேஜர் மாஜித் ஆகியோராவார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக காணப்பட்டவர் ஜெரின்டசில்வா என்பவராவார்.
1978ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு காலப்பகுதி வரை தொடர்ச்சியாக யுத்தத்தினை காரணமாக கொண்டு 600 இற்கு மேற்பட்டோர் கடத்தல், படுகொலை செய்யப்படுதல், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் போன்ற பல சம்வங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை பாதிக்கும் விதத்தில் நடைபெற்றபோதும் சம்பவங்கள் தொடர்பான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இச்சம்பவங்களால் பெண்கள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு, பொருளாதாரம் கல்வி ரீதியான சவால்கள்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
நாங்கள் பலதடவைகள் குரல் கொடுத்திருந்த போதும், யாரும் நாங்கள் எதிர்பார்க்கும் நீதியனையோ தங்களால் வழங்கப்பட்ட வாக்குறிதியினையோ இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
ஆயினும் இனத்துவ ஒருமையை விரும்புவதாக தெரிவிக்கும் தாங்களது நல்லாட்சியில் இனிமேலும் பாகுபாடுகளை நாம் உணராதவாறு தங்களது உற்ற உறவாக எம்மை கருதி காலதாமதமின்றி எமக்கான நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகின்றோம். “எமது உறவுகள் எமக்கு வேண்டும், எமது உறவுகளே எமக்கு வேண்டும்” என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment