கிழக்கு மாகாணத்திலிருந்து குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து மஹரகமையிலுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மற்றும் உறவினர்களின் நன்மை கருதி, மட்டக்களப்பு-மஹரம பஸ்சேவை ஓகஸ்ட் 15ஆம் திகதி தொடக்கம் மீண்டும் தினமும் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலை முகாமையாளர் மாசிலாமணி கிருஷ்ணராஜா தெரிவித்தார்.
கடந்த ஜுலை மாதம் 19ஆம் திகதி இவ்வாறானதொரு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து மஹரகமை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்குச் செல்வோர் அதிக நன்மையடைந்தனர்.
எனினும், கதுறுவெலயிலுள்ள சில தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்த பஸ் சேவைக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தியதனால் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அந்த சேவை ஆரம்பித்த 4 நாட்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
ஆயினும், போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுமதியோடு பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டதின் பின்னர் இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல பஸ்கள் மாறி மாறிப் பயணம் செய்து மஹரகமை செல்லும் சிரமத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காக பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பிலிருந்து மஹரகமைக்கு நேரடியான பஸ்சேவை நடாத்த தாங்கள் முன்வந்ததாக அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment