20 Aug 2017

இலங்கை முஸ்லிம் சமூகம் விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

SHARE
இலங்கை முஸ்லிம் சமூகம் விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம். நிராஸ் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் சுமார் 10 ஆயிரம்பேர் சனத்தொகையைக் கொண்ட பல கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மீராகேணி ஜும்மாப் பள்ளி வாசலில் சனிக்கிழமை 19.08.2017 இரவு இடம்பெற்றது.

பிரதேச முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அஷ்ஷெய்ஹ் நிராஸ்@ முஸ்லிம் சமூக மட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் நாடிச் சென்று முதலில் சிறந்த மனிதர்களாக வாழ்வதற்கான விழிப்புணர்வை ஊட்டவேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் தலைமைத்துவங்கள், முஸ்லிம் நிறுவனங்கள், இஸ்லாமிய மார்க்க அமைப்புக்களைப் பற்றி உள்ளும் புறமும் அநேக விமர்சனங்கள் உள்ளன.
இந்த விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இந்த விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் பார்வை ஷரீயா அடிப்படையிலான தூய நெறிமுறைகளைக் கொண்டதாகவே இருக்கின்றது.

ஆனால் ஷரீயத்திற்கு அப்பால் இருந்து பணியாற்றக் கூடிய நம் நாட்டின் பல்வேறு நிருவாக அமைப்புக்களுடன் சேர்ந்து கடமையாற்றும்போது சில சங்கடங்கள் ஏற்படுகின்றன.

முற்று முழுதாக முஸ்லிம்களின் பிரதேசங்களிலுள்ள நிருவாகக் கட்டமைப்புக்கள் மார்க்க விழுமியங்களைப் பேணி நடக்கின்ற அமைப்பிலே இருந்தால் இஸ்லாத்தின் தூய மார்க்க நெறி முறைகளை எடுத்தியம்பி எத்தி வைக்க முடியும்.

தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை சாதாhரண கிராம மக்கள் தொடக்கம், உயர் அதிகாரிகள் வரை கடைப்பிடித்து நடந்தால் இஸ்லாத்தின் மீதும் இந்த நாட்டின் முஸ்லிம்கள் மீதும் ஏனையோர் கொண்டுள்ள காழ்ப்புணர்வு தணிந்து போகவும் அதன் காரணமாக அவர்கள் விழிப்புணர்வு பெறவும் வாய்ப்பேற்படும்.

சமூக பலம் என்பது தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வதனூடாகவே அடைந்து கொள்ள முடியும்.

தூய இஸ்லாமிய வாழ்க்கை முறைகளையும் அதன் போதனைகளையும் நடைமுறையில் காட்டாமல் அவற்றை  ஒரு புறம் வைத்து விட்டு வெறும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகளாகவோ அல்லது ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் வாழ்கின்றோம் என்ற காரணத்தினாலோ நாம் எந்த வகையிலும் சிறப்படைந்துவிட முடியாது.

வியாபாரம், உத்தியோகம், கல்வி, அரசியல் உட்பட இன்னபிற பொருளாதாரத்தை ஈட்டும் கூலித் தொழில்களிலும் ஊழியம் வாங்குவதிலும் நாம் இஸ்லாமியப் பண்புகளைக் கடைப்பிடித்தாலேயன்றி வெற்றியும் கௌரவமும் ஒருபோதும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை.

எனவே, கிராம மட்ட அபிவிருத்தி தொடங்கி நகர அபிவிருத்தி வரை இடைப்பட்ட சமூக, கல்வி, அரசியல், பொருளாதார, கட்டுமான, வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் நாம் தூய இஸ்லாத்தின்படி வாழ்ந்து அந்த வாழ்க்கை முறையினை வார்த்தைகளிலன்றி நடைமுறையிலேயே அடுத்த சமூகத்தாருக்கு எத்தி வைக்க வேண்டும்.

இதனூடாகவே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் பிரதேசங்களும் நெருக்கடிகளைத் தவிர்ந்து கொண்டு அபிவிருத்தி காண முடியும்”என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: