24 Jul 2017

நீதித்துறை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நியாயமாக செயற்படுவதற்கு எதிராக வரும் அனைத்து தலையீடுகளையும் எதிர்கொண்டு அதற்கு எதிராக போராடவேண்டும்

SHARE
நீதித்துறை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நியாயமாக செயற்படுவதற்கு எதிராக வரும் அனைத்து தலையீடுகளையும் எதிர்கொண்டு அதற்கு எதிராக போராடவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.நாராயணன் பிள்ளை தெரிவித்தார்.

திங்கட் கிழமை (24) மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்கொண்டுவரப்படவேண்டும்.

ஒரு நாடு அமைதியான நாடாக இருக்கவேண்டுமானால் அந்த நாட்டில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டுமானால் அந்த நாட்டின் நீதித்துறை அச்சமின்றியும் சுதந்திரமாகவும் செழிப்புடனும் செயற்படவேண்டும்.
ஒரு நாட்டில் இயற்றப்படும் சட்டத்தினைக்கூட சரியா பிழையா என்று ஆராய்வது கூட நீதிமன்றங்களேயாகும்.அதிகாரிகள் கூட சரியான வழியில் நடக்கின்றார்களா என்று பார்த்து சரிபிழை கூறுவதும் நீதிமன்றங்களாகும்.தனிப்பட்டவர்களிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்த்து அவர்களுக்கு சரியான தீர்வினை வழங்குவதும் இந்த நீதிமன்றங்களாகும்.

ஒரு மனிதனின் தனி மனித உரிமையை பாதுகாப்பது,அவனது அடிப்படை உரிமையினை பாதுகாப்பதுபோன்ற சகல பொறுப்புகளும் நீதிமன்றத்திற்கே உரியதாகும்.

இவ்வாறான நிலையில் கால்கைகளைக்கட்டி நீதிமன்றங்களுக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால் அந்த நீதிமன்றங்கள் சரியான முறையில் கடமையினை செய்யமுடியாத நிலையேற்படும்.அவ்வாறு நடைபெற்றால் அந்த நாடு சீரழிவுநிலைக்கே செல்லும்.

எனவே நீதித்துறை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நியாயமாக செயற்படுவதற்கு எதிராக வரும் அனைத்து தலையீடுகளையும் எதிர்கொண்டு அதற்கு எதிராக போராடவேண்டும்.








SHARE

Author: verified_user

0 Comments: