மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின் போது 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் சில திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 30 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான சூரவூப் ஹக்கீம், சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த பங்கேற்கவுள்ளனர்.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மர்{ஹம் அஷ்ரப் வாசிகசாலை மற்றும் கலாசார மண்டபத்தின் இரண்டாம் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் இதன் போது நடப்படவுள்ளதுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைக் கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்படவுள்ளன.
மேலும் ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலா தகவல் மையம் மற்றும் சுற்றுலாத் தளத்திற்கான அடிக்கல் என்பனவும் நடப்படவுள்ளது,
அத்துடன் ஆரையம்பதியில் 100மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டட தொகுதிக்கான அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் நடப்படவுள்ளது.
இதில் அமையவுள்ள சுற்றுலாத் தொகுதியில் பயிற்சி மையங்கள் மற்றும் கலாசார மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment