கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அப்பல்கலைக் கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளைக் கட்டி, பந்தல் அமைத்து தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று கடந்த 07.06.2017 அன்று தொடக்கம் சத்தியாக்கிரகம் இருந்து வருகின்றனர்.
இப்பொழுது அவர்களது போராட்டம் 13வது நாளை அடைந்திருக்கின்ற வேளையில் தமக்கு ஆதரவாக சமூகத்திலுள்ள பல தரப்பட்ட மக்களுமாகச் சேர்ந்து சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கோரிக்கைக்கு ஆதரவாகக் கையொப்பமிட்டிருப்பதாக மாணவர் அமைப்பினர் ஞாயிறன்று 18.06.2017 தெரிவித்தனர்.
சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலுமுள்ள மக்களிடமிருந்து சுமார் 2 ஆயிரம் கையொப்பங்களையே தாம் எதிர்பார்த்தபோதும் தற்போது வரை 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமது கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டிருப்பதாகவும் பெருகி வரும் இந்த மக்கள் ஆதரவைக் கண்டு தாம் வியப்படைந்ததாகவும் மாணவர் பேரவையினர் தெரிவித்தனர்.
“குறிப்பட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பினை பூர்த்தியாக்கு, மஹாபொல புலமைப் பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், பொய்யான தீர்வுகள் வேண்டாம் விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு, மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சீசீரிவி கமெராக்களை உடனே அகற்று” என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தே சத்தியாக்கிரகம் இருந்து வருகின்றனர்.
ஞாயிறன்று இடம்பெற்ற கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழாவுக்கு தாங்கள் ஒருபோதும் இடைஞ்சலாக இருக்கவில்லை என்றும் தமது முழுமையான ஆதரவை சக பட்டம்பெறும் மாணவர்களுக்கு அளித்துள்ளதாகவும் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment