4 Mar 2017

அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கு தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர. அஹமட்

SHARE
நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வில் அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கு தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது, இனங்களுக்கிடையிலான இன ஐக்கியம் என்பதை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பொழுது போக்குப் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்@ இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சியின் நகர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்.

இந்த வேளையில் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் இப்பொழுது இருப்பதையும் விட இன்னும் இறுக்கமாக இன உறவைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதான தலைமைகள் இப்பொழுது கைகோர்த்து நல்லாட்சியை நகர்த்தி வருகின்றார்கள்.

இந்த நான்கு தலைமைகளும் இன இணக்கப்பாட்டோடு அரசியல் தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்களை மிக நிதானமாக முன்னெடுத்து வருகின்ற வேளையிலே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் பங்களிப்பும் நிதானமும் ஆதரவும் அனுசரணையும் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எல்லாமே சூட்சிகளால் சிதைந்து போகும். மேலும் இந்த நாடு சின்னாபின்னப்பட்டு விடும்.
எங்களுக்குள் இருக்கும் எல்லா வேறுபாடுகளையும் மறந்து நாம் ஒற்றுமைப்பட்டு பிரிவு என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் தவிர்ந்து கொள்வோம். அதிகாரத்தை, உரிமையை, அன்பை, ஆதரவைப் பகிர்ந்து கொள்வோம் பகிர்ந்துண்ணுவோம் பயன் பெறுவோம்.

எமது எதிர்கால சந்ததிக்கு இந்த நாட்டை ஐக்கியப்பட்ட அழகான அபிவிருத்தி அடைந்த நாடாக ஒப்படைப்போம்.

தற்போது வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு சமீப ஒரு சில நாட்களுக்குள் சாதமான தீர்வு கிடைக்கப் பெறும்.
அந்த நகர்வு அதிகார பூர்வமாக மாகாண சபை முதலமைச்சருக்கு கிடைத்துள்ளது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியையும் இந்த இடத்தில் கூறிவைக்க விளைகின்றேன்.

SHARE

Author: verified_user

0 Comments: