4 Mar 2017

தமிழ்த் தலைவர்கள் கூறிய ஆரூடங்களில் இரண்டு பலித்து விட்டன.

SHARE
தமிழ்த் தலைவர்கள் கூறிய மூன்று ஆரூடங்களில் இரண்டு பலித்து விட்டன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார். 
கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பொழுது போக்குப் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது
துரைராஜசிங்கம் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் உரையாற்றிய அவர்

இந்த இனப்பிரச்சினை தீர்வதாக இருந்தால் மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கட்டியம் கூறினார்கள்.
அவை மாறி மாறி ஆண்டு வருகின்ற பெரிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
இனப்பிரச்சனை தொடர்பான விடயங்கள் சரவ்தேச சமூகத்தினால் உற்று நோக்கப்படுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும்.

சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும்;
இந்த ஆரூடங்களிலே இரண்டு இப்பொழுது பலித்திருக்கின்றன.
இரண்டு பெரிய கட்சிகள் இணைந்திருக்கின்றன, சர்வதேச சமூகம் நமது பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளை உற்றுநோக்குகின்றது.
இவை இப்பொழுது பலித்திருக்கின்றன.

நாட்டில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதுடன், அவை பிராந்தியங்களுக்கும் சென்றடைய வேண்டும்.

பகிரப்படும் ஆட்சி அதிகாரங்கள் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிக்கின்ற வகையிலே இடம்பெறக் கூடாது.

அது ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பிராந்தியங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் அப்பிராந்தியங்கள் முன்னேற்ற மடையும்.
பன்மைத்துவமாக இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய மொழி கலை கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றின் சிறப்புத் தன்மையோடு தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என்கின்ற அடிப்படையிலேயே தற்போது அரசியல் சீர் திருத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு வந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி மக்கள் தீர்ப்புக்காக விடும் பிரதயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அது மக்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இந்த நாட்டின் எல்லா மக்களும் அரசியல் சீர்திருத்த அதிகாரங்களோடு சமத்துவமாக வாழ வழிவகுக்கும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: