5 Mar 2017

தொலைக்காட்சி நாடகங்களை உண்மை என்று நம்பிவிடும் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்- கோரளைப்பற்று பிரதேச செயலாளர்

SHARE
தொலைக்காட்சி நாடகங்களில் நடப்பவை எல்லாவற்றையும் வாழ்க்கைமுறையாகவும் உண்மை என்றும் நம்பிவிடும் நிலைமை காணப்படுகிறது. அதில் மாற்றம் தேவை என்று கோரளைப்பற்று
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தெரிவித்தார்.

கோரளைப்பற்று பிரதேச செயலகமும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி அபிவிருத்திக்குழுவும் இணைந்து நடத்திய நாடக விழா 2017 ன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்,

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றன டச் போன்கள், தொலைபேசியில் டச் கூடி, சமூகத்துடனான டச் இல்லாமல் போய்விட்டது. எந்தவொரு இலத்திரனியல் சாதனமும் நமக்கு வழங்கப்பட்டிருக்குமானால் அதற்கு ஒரு அளவு ஒன்று இருக்க வேண்டும். அந்த அளவை மீறிவிட்டால் நம்முடைய வாழ்க்கையை அது அழித்துவிடும்.

அதுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர் சமூகத்திலிருந்துதான் எதிர்கால சந்தத்தியினர் உருவாக்கப்படுகின்றனர். நல்ல சமூதாயத்தினை உருவாக்குவதற்கு மாணவர் பருவம் சிறந்தது. அதனைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் கற்றுக் கொள்கின்ற படிப்பினைகள், அனுபவங்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

ஆகவே அச் சந்தர்ப்பங்களின் ஊடாக சிறந்த மாணவசர் சமூதாயத்தினை உருவாக்க வேண்டியது. இன்றைய காலகட்டத்தில் சவாலும் கடமையுமாக இருக்கின்றது. அந்தக்கடமைக்கு சற்று இடமளியுங்கள் என்று மாணவர்களிடம் கேட்டுக் கொள்ளவிரும்புகிறேன்.

முத்தமிழில் ஒன்றுதான் நாடகம், நாடகம் என்பதற்கு நெறிமுறைகள் இருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கின்ற நாடகங்கள் வேறு உண்மையான நாடகங்கள் வேறு, அந்த நெறிமுறைகளுக்கூடாக இருக்கின்ற சிறந்த நாடகங்களே இன்றைய காலத்தில் நாம் ரசிக்கின்றதாக இருக்கவேண்டும்.

அதே போன்று சமூகத்தில் இருக்கின்ற பிழையான விடயங்களை வெளிக்கொணர்வதற்காக சமூகத்தின் கண்ணாடி என்கிற நாடகங்களை நடிப்பதற்கு முன்வாருங்கள். எனவே சமூகத்திலிருக்கின்ற தேவையற்ற விடயங்களை களைவதற்கு அதனைப்பயன்படுத்துங்கள். அதனை நிவர்த்தி செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைய தொலைக்காட்சி நாடகங்களில் பலர் மூழ்கியிருப்பதனை காணமுடிகிறது. வீட்டிற்கு உறவினர்களுடன் உரையாடுவதற்குக்கூட நேரம் இல்லாத நிலை இருக்கிறது. இதனை நாங்கள் மாற்றவேண்டும். நாடகத்தில் வருகின்ற வாழ்க்கை முறை நல்ல நெறிமுறைகளுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் வித்தியாசப்பட்டது. அதில் முடிவு வரையில் நல்லவிடயங்கள் நடப்பதில்லை. ஆரம்பத்திலிருந்து நீங்கள் கெட்ட விடயங்களளை பார்த்துப்பார்த்து அதனை உண்மையென நம்பிவிடுகிறீர்கள்.

எனவே நல்லவிடயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், ஊடகங்களிருந்து நல்ல விடயங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதன் ஆரம்ப நிகழ்வில், கோரளைப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா,  வாழைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதி அதிபர் எஸ்.பாலமுரளி, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் க.ஜெகதீஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவுக விரிவுரையாளர்களான த.விவேகானந்தராசா, எஸ்.விமல்ராஜா உள்ளிட்டோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.

கல்குடா வலய பாடசாலைகளின் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இவ் நாடக விழாவில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவுகத்தினால் சவால் மற்றும் பாடம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதுடன், கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.









SHARE

Author: verified_user

0 Comments: